இஸ்லாமியர்களின் பக்ரித் பண்டிகை நெருங்கும் நிலையில், ராணிப்பேட்டை வார சந்தையில் ரூ.3 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை நடந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மற்றும் பக்ரீத் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுவதுண்டு. ரமலான் என்பது ஈகைத் திருநாள் எனவும், பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாள் எனவும் கூறப்படுகிறது.
இறைத்தூதர் இப்ராஹிம், தனது மகன் இஸ்மாயிலை, இறைவனுக்காக அறுத்துப் பலியிட முற்பட்ட நிகழ்வாக பக்ரீத் பண்டிகை என்னும் தியாகத் திருநாள் கொண்டாடப் படுகிறது.
இஸ்லாமியர்களின் துல்ஹஜ் மாதம் 10ஆம் நாளில் பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிட்டு, அதன் இறைச்சியை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் வழங்குவார்கள்.
தமிழ்நாட்டில் வரும் 28ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இதற்காக வாரச் சந்தைகளில் ஆடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

ராணிப்பேட்டை நகராட்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுவதுண்டு. இன்று காலை தொடங்கிய வாரச்சந்தையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் பெருமளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான வாகனங்களில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வியாபாரிகள் பொதுமக்கள் என 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இன்று அதிகாலை முதலே சந்தையில் குவிந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர். வெள்ளாடு, மற்றும் செம்மறி ஆடுகள் அனைத்தும் ரூ. 5 ஆயிரம் ரூபாய் முதல் ரூ. 40,000 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகளின் அமோகமாக நடைபெற்றது. ஆடுகளை வாங்கிய வியாபாரிகள் அவற்றை வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
ஒட்டுமொத்தமாக சந்தையில் 5 மணி நேரம் நடைபெற்ற விற்பனையில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது
