தமிழகத்தில் விஜய் முதல்வராக பதவியேற்றதும், கோவில், கல்வி நிலையங்கள் அருகே இருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதையடுத்து முதல்கட்டமாக 500-க்கு மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து மதுக்கடைகளை மூடும் பணிகளானது நடந்து வருகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசு மதுபானக் கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு மாற்றுக் கடைகள் மற்றும் அலுவலகங்களில் பணி வழங்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில், முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின்படி, 500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த விற்பனையாளர்கள் மற்றும் இதர ஊழியர்களை, பணி மூப்பு அடிப்படையில் காலிப்பணியிடங்கள் உள்ள அருகில் உள்ள கடைகளில் பணியமர்த்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அருகில் உள்ள கடைகளில் பணியமர்த்தியது போக, மீதமுள்ள பணியாளர்களுக்கு டாஸ்மாக் கிடங்குகள், மாவட்ட அலுவலகங்களில் பணி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
