ஈரான் உடனான சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மேம்படுத்தும் ‘ஆபிரகாம் ஒப்பந்தத்தில்’ முஸ்லிம் நாடுகள் கைகெயழுத்திட வேண்டுமென்ற அமெரிக்க அதிபரின் நிபந்தனையை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
அண்மையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த டிரம்ப், “ஈரான் உடனான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், இந்த ஒப்பந்தம் வெற்றி பெற வேண்டுமானால், சவுதி அரேபியா, கத்தார், துருக்கி, எகிப்து, ஜோர்டான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய முஸ்லிம் நாடுகள் ஆபிரகாம் ஒப்பந்தத்தில் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், இந்த ஒப்பந்தத்தில் இணைய மறுக்கும் நாடுகள் மத்தியஸ்தப் பணிகளில் பங்கேற்க முடியாது என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
டிரம்பின் இந்த அழுத்தத்தை பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் காஜா ஆசிஃப் கடுமையாக விமர்சித்துள்ளார். தங்கள் நாட்டின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணான எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட மாட்டோம் என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இஸ்ரேலை அங்கீகரிப்பது என்பது பாகிஸ்தானின் நீண்டகாலக் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் பாலஸ்தீன அரசு உருவாக்கப்படும் வரை இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தனது பாஸ்போர்ட்டில் இஸ்ரேலை ஒரு நாடாகவே குறிப்பிடாத ஒரே நாடு என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் காஜா ஆசிஃப், இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு மாறாது என்பதை உறுதிப்படுத்தினார். சொன்ன சொல்லைக் காப்பாற்றாத ஒரு தரப்புடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று டிரம்ப்பின் முயற்சிக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரான் – அமெரிக்கா இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இந்த ஒப்பந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் சவாலாக உருவெடுத்துள்ளது.
பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல், இஸ்ரேலுடன் கைகோர்க்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்பதை பாகிஸ்தான் இந்த மறுப்பின் மூலம் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உறுதிப்படுத்தியுள்ளது.
