கோவா மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கிரிஷ் சோடங்கர் அகில இந்திய காங்கிரஸ் தலைமையால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைவர் அமித் பட்கருக்குப் பதிலாக அவர் இந்த பொறுப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில பொறுப்பாளராக கிரிஷ் சோடங்கர் செயல்பட்டு வந்தார். தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற அரசியல் நகர்வுகளில், தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதிலும், “ஆட்சியில் பங்கு” என்ற முழக்கத்தை முன்னெடுத்து தவெக பக்கமாக காங்கிரஸை நகர்த்துவதிலும் இவரே முக்கிய மூளையாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 6 தசாப்தங்களுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் பங்குபெற இவரது சாணக்கியத்தனமான பேச்சுவார்த்தைகளே முக்கியக் காரணமாக அமைந்தன.
இன்னும் ஓராண்டில் கோவா மாநிலத்தில் சட்டமன்றப் பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், கிரிஷ் சோடங்கரின் இந்த நியமனம் கோவா காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் சுறுசுறுப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும், கூட்டணிகளை ஒருங்கிணைப்பதிலும் வல்லவரான இவரை கட்சித் தலைமை தற்போது கோவாவிற்கு அனுப்பியுள்ளதால், இவரே காங்கிரஸின் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறக்கப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூடுதல் பலமாக, கோவா மாநில காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக யூரி அலேமாவும், தேர்தல் அறிக்கை குழுத் தலைவராக எம்பி விரியாடோ பெர்னாண்டஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
