ரயில் பயணிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் ஒரு சிறப்பான உள்கட்டமைப்பு மேம்பாட்டைச் செய்துள்ளது.
கடந்த நிதியாண்டில், இக்கோட்டத்திற்கு உட்பட்ட 37 முக்கிய ரயில் நிலையங்களில் மொத்தம் 81 தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் (WVMs) பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போதைய கடும் கோடைகாலத்தில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தினமும் பயணிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கும், நீண்ட தூரப் பயணிகளுக்கும் இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
மூர் மார்க்கெட் வளாகம், சென்னை சென்ட்ரல், தாம்பரம், காட்பாடி, அரக்கோணம், ஆவடி, திருவள்ளூர், பெரம்பூர், எழும்பூர் வழித்தடத்தில் உள்ள சென்னை கோட்டை, பார்க் மற்றும் கடற்கரை, திருமயிலை உள்ளிட்ட 37 முக்கிய நிலையங்களில் இந்த இயந்திரங்கள் பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பயணிகள் வெளியில் விற்கப்படும் விலையுயர்ந்த பாட்டில் தண்ணீரை நம்பியிருக்க வேண்டிய அவசியம் குறைந்துள்ளது. மேலும், பயணிகள் தங்கள் சொந்த பாட்டில்களைப் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படுவதால், பிளாஸ்டிக் கழிவுகளும் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டண விவரம்: பயணிகளின் வசதிக்காக மிகக் குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது, அதாவது, 300 மி.லி பாட்டில் – ரூ.2, அரை லிட்டர் – ரூ.5, 1 லிட்டர் – ரூ.8, 2 லிட்டர் – ரூ.12, 5 லிட்டர் – ரூ.25க்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.
புகார் அளிக்க: இந்த இயந்திரங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலித்தாலோ அல்லது தரம் குறித்த குறைபாடுகள் இருந்தாலோ, பயணிகள் ‘ரயில்மதத்’ (RailMadad) மொபைல் செயலி மூலமாக உடனடியாகப் புகார் அளிக்கலாம். இது தவிர, இயந்திரங்களின் அருகே உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தும் தங்களின் புகார்களைப் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
பயணிகளுக்குப் பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் எளிமையான பயணச் சூழலை உருவாக்குவதே தங்களின் நோக்கம் என்று தெரிவித்துள்ள சென்னை ரயில்வே நிர்வாகம், வரும் நாட்களிலும் இந்தத் திட்டத்தை மேலும் பல சிறிய மற்றும் நடுத்தர ரயில் நிலையங்களுக்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
