வான் மற்றும் கடல் ஆகியவற்றை கடந்து நவீன முறையில் செயல்பட கூடிய வகையில் நம்முடைய முப்படைகளின் கூட்டு சக்தி உள்ளது என்று கூறினார் உபேந்திரா திவேதி.
மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கலந்துகொண்டு உரையாற்றினார். நாட்டின் பாதுகாப்பு வலிமையை வலியுறுத்திய அவர், தற்போதைய நவீன போர் சூழலில் இந்திய முப்படைகளின் ஒருங்கிணைந்த திறனைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
ராணுவத் தலைமைத் தளபதி திவேதி கூறியதாவது, “நிலம், வான், கடல் ஆகிய மரபுவழி போர் முனைகளைத் தாண்டி, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இயங்கும் வலிமை நமது முப்படைகளுக்கு உள்ளது. இந்த ஒருங்கிணைந்த சக்தியானது எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் திறனை அதிகரிக்கிறது” என்றார். பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி உயிர்களைப் பலி கொடுத்த சம்பவத்துக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை அவர் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தானுக்குள் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்த நடவடிக்கையில் துல்லியமாகத் தாக்கி அழித்ததாகக் குறிப்பிட்ட அவர், “ஆபரேசன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. தற்போது தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தேவை ஏற்பட்டால் ஆபரேசன் சிந்தூர் 2.0 உடனடியாக செயல்படுத்த முப்படைகளும் முழு தயார் நிலையில் உள்ளன” என்று உறுதியளித்தார். வருங்காலப் போர்கள் பாரம்பரிய முறைகளில் மட்டும் நடைபெறாது என்று எச்சரித்த தளபதி, “விண்வெளி, சைபர் தாக்குதல்கள் மற்றும் அறிவுசார் (Intelligence-based) நடவடிக்கைகள் எதிர்காலப் போர்க்களங்களின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
நவீன போர் முனைகள் மிகவும் வெளிப்படையானவை. ஒரு தரப்பின் நடவடிக்கை மற்ற தரப்புக்கு உடனடியாகத் தெரியும் நிலை உருவாகியுள்ளது” என்றார். இதனால், படை குவிப்பு, ராணுவ ஆள் சேர்ப்பு, எல்லைப் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ராணுவ வீரர்கள் மற்றும் அங்குள்ள குடிமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். எல்லைப் பாதுகாப்பில் ஏற்படும் எந்தவித சிறு தவறும் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்பதால், தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு மிக முக்கியம் என்று சுட்டிக்காட்டினார்.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு, இந்தியாவின் பாதுகாப்பு கொள்கையின் திசைவழியை தெளிவுபடுத்துவதாக அமைந்தது. தேசிய பாதுகாப்பு அகாடமியில் இளம் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் சூழலில், உயர் தலைமைத்துவம் வழங்கிய இந்த அறிவுரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தற்போதைய புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்திய முப்படைகளின் தயார் நிலை மற்றும் ஒருங்கிணைப்பு நாட்டின் பாதுகாப்புக்கு வலு சேர்க்கும் என்ற நம்பிக்கையை இந்த உரை ஏற்படுத்தியுள்ளது.
