டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள ஐந்து மாடி தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், தீயில் சிக்கிய 47 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மாளவியா நகரின் ஹவுஸ் ராணி (Hauz Rani) பகுதியின் குறுகலான தெருவில் அமைந்துள்ள ‘மிகாசா இன்’ (Micasa Inn) என்ற ஐந்து மாடி ஹோட்டலின் அடித்தளத்தில் உள்ள உணவகத்தில் இன்று காலை சுமார் 8.50 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த சமயத்தில் ஹோட்டலில் இருந்த பெரும்பாலான விருந்தினர்கள் உறங்கிக் கொண்டிருந்ததால், புகை மூட்டம் மற்றும் தீயின் வீரியத்தை அவர்களால் உடனடியாக உணர முடியாமல் போயுள்ளது.
உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, சுமார் 25 அறைகளைக் கொண்ட இந்த ஹோட்டலில் 40-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் தங்கியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வந்திருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் என்று கூறப்படுகிறது. தீயின் பிடியில் இருந்து தப்பிக்க சில நபர்கள் ஹோட்டல் கட்டிடத்தின் மேலிருந்து கீழே குதிக்கும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.
ஹோட்டல் உணவகத்தில் பணியாற்றும் கேசர் சிங் என்ற சமையல் கலைஞர் இந்த கோர விபத்து குறித்துப் பேசுகையில், “காலை 8:00 மணியளவில் சமையலறையில் இருந்த எலக்ட்ரிக் ஸ்டவ்வை ஆன் செய்ய முயன்றபோது திடீரென தீப்பிழம்புகள் எழும்பின. ஹோட்டல் முழுவதும் தீ பரவுவதை உணர்ந்து உடனடியாக எனது உதவியாளரை எச்சரித்துவிட்டு, எப்படியோ தப்பித்து வெளியே வந்தேன்” எனக் கூறினார்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் டெல்லி தீயணைப்புத் துறை, டெல்லி காவல்துறை, பேரிடர் மேலாண்மை அமைப்பு (DDMA) மற்றும் CATS ஆம்புலன்ஸ் சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புப் படையினரின் துரித நடவடிக்கையால் 47 பேர் இடிபாடுகளிலிருந்தும் தீயிலிருந்தும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
https://x.com/PMOIndia/status/2062066482897674699?
இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்குத் தலா 50,000 ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் எனப் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
https://x.com/gupta_rekha/status/2062064183391535510?
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தனது ‘X’ தளப் பதிவில், “இந்த விபத்து மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு டெல்லி அரசு அனைத்து விதமான மருத்துவ உதவிகளையும் ஆதரவையும் வழங்கும். நிலைமையை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
