தமிழக முதல்வர் மற்றும் நடிகருமான விஜய்யின் திரையுலகப் பயணத்தில் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’, உலகம் முழுவதும் நாளை 23 ம் தேதி மிக பிரம்மாண்டமாகத் திரைக்கு வரவுள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் திருவிழா போன்ற பிரம்மாண்டமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விண்ணில் ஜொலித்த ‘மரீனா ஃப்ளையிங் எல்.இ.டி’
படத்தின் விளம்பர உத்தியாக, சென்னை மெரினா கடற்கரையில் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத வகையில் ‘மரீனா ஃப்ளையிங் எல்.இ.டி’ (Marina Flying LED) காட்சி திரையிடப்பட்டது. அதிநவீன ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் விண்ணில் மிதந்த பிரம்மாண்டமான எல்.இ.டி திரையில், விஜய்யின் மாஸ் தோற்றங்கள், படத்தின் தலைப்பு மற்றும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு அறிவிப்புகள் காட்சியளிக்கப்பட்டன. இந்த பிரம்மாண்டமான நவீன விளம்பர உத்தியை நேரடி காட்சியாகக் காண மெரினாவில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இந்த வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதிரடி முன்பதிவு
திரையரங்கு முன்பதிவுகள் தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இருக்கை வசதி மற்றும் திரையரங்குகளின் நிலைக்கு ஏற்ப டிக்கெட் கட்டணங்கள் ₹100 முதல் ₹1,700 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளில் அதிகாலை 4 மணி மற்றும் 8.40 மணி சிறப்பு ரசிகர் காட்சிக்கு (FDFS) அரசு மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாநிலம் தழுவிய பிரம்மாண்டக் கொண்டாட்டம்
விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிரம்மாண்டமான கட்-அவுட்கள், பாலாபிஷேகம், சிறப்புத் திருக்கோயில் பிரார்த்தனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ரசிகர்கள் மட்டுமின்றி, முக்கியக் அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களும் இக்கொண்டாட்டங்களில் பங்கெடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு ஒரு வரலாற்றுப் பெருநிகழ்வாக மாறியுள்ளது.
