சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வழிப்பறி, திருட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையின் போது, நீண்ட நாட்களாக போலீசாரால் தேடப்பட்டு வந்த இரண்டு குற்றவாளிகள் சிக்கியுள்ளனர்.
சென்னையின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றான கோயம்பேடு காய்கறி, கனி மற்றும் பூ மார்க்கெட் பகுதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறையினர் தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சமீபகாலமாக கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வழிப்பறி, செல்போன் திருட்டு, அடிதடி மற்றும் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தரப்பில் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கோயம்பேடு காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, ட்ரோன் கேமராக்கள் மூலம் மார்க்கெட் வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் வான்வழியாக கண்காணிக்கப்பட்டன. சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது, அடிதடி வழக்கில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த இரண்டு நபர்கள் ட்ரோன் கண்காணிப்பில் சிக்கினர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அவர்களை கைது செய்தனர்.விசாரணையில், அவர்கள் மதுரவாயல் ஸ்ரீலட்சுமி நகரைச் சேர்ந்த அஜித் (31) மற்றும் பாலமுருகேசன் (32) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவர் மீதும் பல்வேறு அடிதடி மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதும், கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பந்தப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றச் செயல்களைத் தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ட்ரோன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
