பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புது டெல்லியில் நாளை ஜூன் 11ஆம் தேதி நிதி ஆயோக்கின் 11வது கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள், மத்திய நிதி அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தனி விமானத்தில் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக காலையில் அவர், மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதன்பின்னர் டெல்லி புறப்பட்டு வந்த முதலமைச்சரை, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அதிகாரிகள் வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சருக்கு அளிக்கப்பட்ட காவல்துறையினர் மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.

அங்கு சிறிது நேரம் ஓய்வுக்குப் பின்னர் முதலமைச்சர் ஜோசப் விஜய் முதன்முறையாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.

இதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டவர், துணைக் குடியரசுத் தலைவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புகளுக்குப் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தியை, ஜன்பத் சாலையில் உள்ள இல்லத்திற்கு சந்திக்க சென்றார். அவரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும், சோனியா காந்தியும் வரவேற்றனர்.

இருவரையும் சந்தித்து சிறிது நிமிடம் பேசியவர் மீண்டும் தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பினார்.
