தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய ஒரு புதிய பரிணாமத்தை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் தந்த அதிர்வலைகளும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதிய ஆட்சி அமைப்பும் முந்தைய அரசியல் கூட்டணிகளைப் புரட்டிப்போட்டுள்ளன.
இந்த அரசியல் புயலின் மையப்புள்ளியாக இப்போது இருப்பது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் அசைக்க முடியாத தேர்தல் கூட்டணியாகத் திகழ்ந்த இந்த அணியிலிருந்து, தற்போது இடதுசாரித் தோழமைகளும் விடைபெறத் தொடங்கியிருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களின் தற்போதைய அறிவிப்புகள், திமுகவின் மிக முக்கியமான வாக்கு வங்கியிலும், அரசியல் அரணிலும் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளதை உறுதி செய்கின்றன.
தமிழக தேர்தல் அரசியலில் கொள்கைப் பிடிப்பு மற்றும் அடிமட்டத் தொண்டர்களின் வாக்கு பலத்திற்கு எப்போதும் இடதுசாரிக் கட்சிகளுக்கு முக்கிய இடமுண்டு. 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024 பொதுத்தேர்தல் எனத் தொடர் வெற்றிகளை திமுக கூட்டணி குவித்ததற்கு கம்யூனிஸ்ட்டுகளுடனான கூட்டணி மிக முக்கிய அடித்தளமாக அமைந்தது. ஆனால், 2026 தேர்தல் முடிவுகள் மற்றும் தவெகவின் புதிய ஆட்சி உருவாக்கம் இந்தக் கூட்டணியின் ஆயுளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
கழன்று கொண்ட கம்யூனிஸ்ட்
“தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் இடம்பெற இயலாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். காங்கிரஸ், விசிக மற்றும் ஐயுஎம்எல் போன்ற கட்சிகள் தவெக அமைச்சரவையில் பங்கு பெற்றுள்ள நிலையில், கம்யூனிஸ்ட்டுகள் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் போன்றோர், “திமுக தலைமையிலான முற்போக்குக் கூட்டணி தற்போதைய நிலையில் நீடிக்கவில்லை” என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளனர். தேசிய அளவில் ‘இந்தியா’ (INDIA) கூட்டணியில் இருந்தும் திமுக விலகியுள்ளதாக அறிவித்துள்ள சூழலில், தற்போது கம்யூனிஸ்ட்டுகளும் கழன்று கொண்டிருப்பது திமுகவைத் தமிழக அரசியலில் முற்றிலுமாகத் தனிமைப்படுத்தியுள்ளது.
கூட்டணி விரிசலடைவதற்குக் கடைசியாக அமைந்த புள்ளி, விசிக முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு திமுகவில் இணைந்த நிகழ்வாகும். அந்த மேடையில் பேசிய மு.க.ஸ்டாலின், “இன்னும் 3 மாதமாவது தாங்குமா என்ற கேள்விக் குறியோடுதான் தவெக ஆட்சி நடந்து வருகிறது” என விமர்சித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 108 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட ஒரு புதிய அரசை, அது பதவியேற்ற சில நாட்களிலேயே அதன் ஆயுள் குறித்து விமர்சித்தது இடதுசாரிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்த சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் மற்றும் மூத்த தலைவர்கள், “மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்; ஒரு அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் பேசுவது முறையான அரசியல் பண்பாடு அல்ல” எனத் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்தத் தார்மீக மோதலே கம்யூனிஸ்ட்டுகள் அதிகாரப்பூர்வமாக வெளியேறும் முடிவை வேகப்படுத்தியது.
திமுகவிற்குள் எழும் ‘தனித்துப் போட்டி’ முழக்கம்
மறுபுறம், நீண்டகாலக் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸும், விடுதலைச் சிறுத்தைகளும் தங்களைக் கைவிட்டுத் தவெக ஆட்சியில் இணைந்தது, திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. “நெருக்கடியான காலங்களில் எங்களோடு பயன் பெற்றுவிட்டு, அதிகாரம் மாறியதும் முதுகில் குத்திவிட்டார்கள்” என்று திமுகவின் ஒரு பிரிவினர் சமூக வலைத்தளங்களிலும் உள்வட்டாரக் கூட்டங்களிலும் கொந்தளித்து வருகின்றனர்.
இதன் விளைவாக, “இனி வரும் இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக யாருடைய தயவும் இன்றித் தனித்துப் போட்டியிட வேண்டும். அப்போதுதான் நம்முடைய சுயபலம் என்னவென்று மற்றவர்களுக்குத் தெரியும்” என்ற முழக்கம் கட்சிக்குள் வலுக்கத் தொடங்கியுள்ளது.
நெருக்கடியை ஸ்டாலின் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?

திமுகவுக்கான தற்போதைய அரசியல் சூழலும் நெருக்கடியும் புதிதல்ல. 1977, 1980 மற்றும் 1991 மற்றும் 2001 ஆகிய காலகட்டங்களில் இதைவிடப் பெருத்த சரிவுகளையும், கூட்டணிக் கட்சிகளின் விலகல்களையும் திமுக சந்தித்துள்ளது. அப்போதெல்லாம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி , “கூட்டணி என்பது தேர்தல் நேரத்து உடன்பாடு; கொள்கை என்பது நிரந்தரம்” என்ற தாரக மந்திரத்தோடு கட்சியை மீட்டெடுத்தார். இந்த நிலையில், தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னால் இருக்கும் சவால்கள் மிகக் கடுமையானவை.
கூட்டணிகளின் பலத்தை நம்பியிருப்பதை விடுத்து, கலைஞர் பாணியில் தமிழகம் தழுவிய மக்கள் சந்திப்புப் பயணங்களை மு.க.ஸ்டாலின் உடனடியாகத் துவங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சமூக நீதிச் சாதனைகளை எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் தீவிரப் பிரச்சார உத்தியைக் கையாள வேண்டும்.வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் கட்சியின் வாக்கு வங்கி குறையாமல் பார்த்துக் கொள்வதே திமுகவின் முதல் இலக்காக இருக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் தீவிரமாக செயல்படுத்தினால் தற்போதைய நெருக்கடியில் இருந்து திமுக மீண்டு வரும் என்கிறார்கள் தமிழக அரசியல் திறனாய்வாளர்கள்.
இப்போதைக்கு கம்யூனிஸ்ட்டுகளின் வெளியேற்றம் திமுகவிற்குத் தற்காலிகமாகப் பின்னடைவாகத் தெரிந்தாலும், இது திமுக தனது சுயபலத்தை மீண்டும் சோதித்துப் பார்ப்பதற்கான ஒரு வரலாற்று வாய்ப்பாகவும் அமையலாம்.சவால்களையும் நெருக்கடிகளையும் சாதகமாக மாற்றுவதே திமுகவின் அரசியல் வரலாறு.
அந்த வகையில், இந்த இக்கட்டான சூழலில் இருந்து மு.க.ஸ்டாலின் கட்சியை எப்படி வழிநடத்தி, மீண்டும் ஒரு வலிமையான மக்கள் சக்தியாக நிலைநிறுத்தப்போகிறார் என்பதைப் பொறுத்தே திமுகவின் எதிர்காலம் அமையும்.
– பா. முகிலன்
