ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும், பல்வேறு இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காகவும் அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பாரம்பரிய நடனத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பிரான்ஸின் நைஸ் நகரத்தைச் சென்றடைந்த பிரதமர் மோடி, தான் தங்கியிருந்த ‘ஹோட்டல் நெக்ரெஸ்கோ’ (Hotel Negresco) வந்தடைந்தபோது இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரைக் காண ஏராளமான இந்தியர்கள் அங்கு குழுமியிருந்தனர். கைகளில் மூவர்ணக் கொடிகளை ஏந்தியபடி “பாரத் மாதா கி ஜே”, “வந்தே மாதரம்” என கோஷங்களை எழுப்பி அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கூடியிருந்த அனைவரையும் சிரித்த முகத்துடன் சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுடன் கைகுலுக்கியும், செல்ஃபிக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுத்தும் தனது அன்பைப் பகிர்ந்து கொண்டார். வீட்டிலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், இந்தியர்களுடனான இந்த பிணைப்பு வலுவாகவே உள்ளது” என பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பிரதமரின் வருகையைச் சிறப்பிக்கும் வகையில், ‘Echoes of Tradition, Spirits of Innovation’ என்ற தலைப்பில் ஒரு பிரம்மாண்டமான கலாச்சார நடன நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரான்ஸ் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த கலைஞர்கள் இணைந்து, இந்தியாவின் பாரம்பரிய நடனங்களான கதக், ஒடிஸி மற்றும் பரதநாட்டியம் ஆகியவற்றை மிகச் சிறப்பாக ஆடி பிரதமரை வரவேற்றனர். இந்த வண்ணமயமான நடன நிகழ்ச்சியை பிரதமர் மோடி வெகுவாக ரசித்துப் பாராட்டினார்.
தனது பயணத்தின் முதல் கட்டமாக, நைஸ் நகரில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி இன்று சந்தித்துப் பேச உள்ளார். இந்தியா – பிரான்ஸ் இடையேயான சிறப்பு உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்த ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
மேலும், விண்வெளி, பாதுகாப்பு, மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான புதிய ஒப்பந்தங்கள். இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் ஸ்டார்ட்அப் மற்றும் முதலீட்டாளர்களை ஒன்றிணைக்கும் ‘பாரத் இன்னோவேட்ஸ்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியை இரு தலைவர்களும் கூட்டாகத் தொடங்கி வைக்கவுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, எவியன்நகரில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிலும், பாரிஸில் நடைபெறும் ‘விவாடெக்’ தொழில்நுட்ப மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். உலக அரங்கில் இந்தியாவின் பங்கை இந்த அரசு முறைப் பயணம் மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
