பிரான்சின் எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் முன்னிலையில் பேசிய பிரதமர், அண்மைக்காலமாக கடல்சார் வணிகப் பாதைகளில் ஏற்பட்டு வரும் இடையூறுகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தனது வலுவான கருத்துகளைப் பதிவு செய்தார்.
https://x.com/MEAIndia/status/2066903017266331905?
ஓமன் வளைகுடா பகுதியில் நடைபெற்ற அமெரிக்க ராணுவத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம், இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், “கடல்சார் வணிகப் பாதைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், கடல் பயணிகள் எவ்வித அச்சமும் இன்றி தங்கள் கடமைகளைச் செய்ய அனைத்து நாடுகளும் உறுதி அளிக்க வேண்டும்” என்றும் பிரதமர் வலியுறுத்தினார். மோதல்களுக்கான தீர்வு போர் அல்ல, மாறாக பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மட்டுமே என்று அவர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்.
https://x.com/narendramodi/status/2066915355910660353?
தற்போதைய உலகம் வளங்களுக்குப் பஞ்சமாக இல்லை, நம்பிக்கைக்குத்தான் பஞ்சமாக உள்ளது. சர்வதேசக் கூட்டணிகளின் வெற்றிக்கு பரஸ்பர நம்பிக்கையே மிக முக்கியமான உத்தி சார்ந்த சொத்து” என்று குறிப்பிட்ட பிரதமர், உலக நாடுகள் ‘வழங்குபவர்-பெறுபவர்’ என்ற மனநிலையிலிருந்து மாறி, சமத்துவம் மற்றும் ஒற்றுமை அடிப்படையிலான கூட்டணிகளை உருவாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இந்தியா உலகத்தையே ஒரு குடும்பமாகப் பார்க்கிறது என்று கூறிய பிரதமர், சர்வதேச சூரியசக்தி கூட்டணி, பேரிடர் எதிர்ப்பு உள்கட்டமைப்பு கூட்டணி, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி, மிஷன் லைஃப் மற்றும் ‘ஏக் பேட் மா கே நாம்’ போன்ற இந்தியாவின் முன்னெடுப்புகள் மனிதநேயத்தை முதன்மைப்படுத்துகின்றன என்பதை எடுத்துரைத்தார். மற்றவர்களுக்காக எதை உருவாக்குகிறோம் என்பதை விட, மற்றவர்கள் தாங்களாகவே உருவாக்க என்ன வாய்ப்புகளை வழங்குகிறோம் என்பதே உண்மையான கூட்டணிக்கான சோதனை என்று அவர் விளக்கினார்.
உலகளாவிய தெற்கு நாடுகள் வெறும் ஆதரவை மட்டும் எதிர்பார்க்கவில்லை, சமமான கூட்டாண்மையையே எதிர்பார்க்கின்றன. கூட்டணிகள் என்பது சார்புத்தன்மையை உருவாக்காமல், கண்ணியத்தை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும் என்று வலியுறுத்திய மோடி, ஆப்பிரிக்க நாடுகளில் இந்தியா மேற்கொண்டு வரும் திறன் மேம்பாடு, விவசாயம் மற்றும் எரிசக்தி சார்ந்த பயிற்சிகள் குறித்து எடுத்துரைத்தார்.
ஜி7 அமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினராக உள்ளது. உலகளாவிய பொருளாதார, நிதி மற்றும் புவிசார் அரசியல் சவால்களை விவாதிக்கும் இந்த முக்கிய மாநாட்டில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரேசில் அதிபர் லுலா டா சில்வா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.
