தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம், செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து 1.30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கைது முதல் செங்கிப்பட்டி வரை
காவிரி உரிமை தொடர்பாக தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மற்றும் பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன்பேரில் இன்று காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தஞ்சாவூர் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்ட அவர், சாலை மார்க்கமாகப் பலத்த பாதுகாப்புடன் தஞ்சைக்கு அழைத்து வரப்பட்டார். இதனிடையே, இன்றைக்குள் விசாரணை நடத்தி முடித்துவிட்டு அவரை விடுவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பிற்பகல் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்படும் வழியில் விழுப்புரத்தில் உணவருந்திய உதயநிதி, 8 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு மாலை தஞ்சை எல்லைக்கு வந்தடைந்தார். தஞ்சை தெற்கு மற்றும் கிழக்குக் காவல் நிலையங்கள் முன்பாக ஏராளமான திமுகவினர் திரண்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காகப் போலீஸார் வாகனத்தை யூ-டர்ன் செய்து செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குத் திருப்பினர். முதலில் அங்கு இறங்க மறுத்து உதயநிதி வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதிலும், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு மற்றும் உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின் காவல் நிலையத்திற்குள் சென்றார்.
விசாரணை நிறைவு… விடுதலை
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தஞ்சை எஸ்.பி. சுந்தரவதனம் முன்னிலையில் ஆய்வாளர் மணிகண்டன் மாலை 6.45 மணி முதல் இரவு 8.10 மணி வரை சுமார் ஒன்றரை மணி நேரம் உதயநிதியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர் காவல் நிலைய ஜாமீனில் முறைப்படி விடுவிக்கப்பட்டார்.

காவல் நிலையத்திற்கு வெளியே கொட்டும் மழையிலும் காத்திருந்த நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் உற்சாகக் குரல் எழுப்பிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வெளியே வந்த உதயநிதி ஸ்டாலின், காரில் ஏறி நின்று திமுகவினரைப் பார்த்து கைகளை அசைத்தபடியே புறப்பட்டுச் சென்றார்.
காரில் திருச்சி செல்லும் உதயநிதி, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளதாகவும், இன்று இரவு 10.30 மணி அளவில் சென்னை வந்தடைவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
