சிவகங்கையைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் டெலிசனின் உடல், 101 நாட்கள் கழித்து இன்று மதுரை தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், ஆகாஷ் டெலிசன், விசாரணையின் போது பலத்த காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மார்ச் 8-ம் தேதி உயிரிழந்தார். இறப்பதற்கு முன், காவல்துறை தன்னைத் தாக்கியதாக அவர் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உடலில் 28 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவித்தது.
இந்த விவகாரம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், 16 காவல்துறையினரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆகாஷின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை நேரடியாகக் கண்காணித்து வந்தது.
இறந்து மூன்று மாதங்களாகியும் உடலைப் பெற்றுக்கொள்ளாத சூழலில், நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, ஆகாஷின் உடலைப் பெற்று கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இன்று காலை காவல்துறையினர் உடலை எடுத்துச் செல்ல முற்பட்டபோது, குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, அவர்கள் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டனர். பின்னர், குடும்பத்தினர் முன்னிலையில் ஆகாஷின் உடல் தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மகனின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்தபோது, அவரது தாய் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை நிலைகுலையச் செய்தது. “என் மகனைக் கொன்றவர்களைக் கைது செய்யவில்லை. என் மகனின் சாவுக்குக் காரணமானவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள்” எனக் கண்ணீருடன் மண்ணை வாரித் தூற்றி அவர் சாபமிட்டது, அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
