மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்தார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. கட்சித் தலைவர் ச.ஜோசப் விஜய் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்றார்.
இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக 4 இடங்களில் போட்டியிட்டது. இதில் 3 இடங்களில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு இடத்தில் தனிச் சின்னத்திலும் போட்டியிட்டது. இதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 2 இடங்களில் வெற்றி பெற்றது.
தவெகவுக்கு திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகள் ஆதரவளித்த நிலையில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் தவெகவுக்கு ஆதரவளிக்க முடியாமல் போனது.
இதையடுத்து முதல்வரான பிறகு விஜய், மரியாதை நிமித்தமாக வைகோவைச் சந்தித்து வாழ்த்துபெற்றார்.
தொடர்ந்து வைகோவும் அவரது மகனும் எம்.பி.யுமான துரை வைகோவும் தவெகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டமானது என துரை வைகோவும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
தவெக தனக்கு ஆதரவளித்த கட்சிக்கு அமைச்சரவையிலும் இடமளித்ததைத் தொடர்ந்து தங்களுக்கான வாய்ப்பு நழுவிப் போனதாகவே வைகோ கருதியதாகக் கூறப்பட்டது.
இதனால் திமுக கூட்டணியில் வைகோ தொடர்வாரா எனக் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் ஜூலை 27 ஆம் தேதி மதிமுக பொதுக்குழுவில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என வைகோ தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேற்று (ஜூன் 16) அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சென்று சந்தித்துப் பேசினார். இதன் எதிரொலியாக இன்று முதல்வர் விஜய்யை வைகோ சந்தித்துப் பேசுவார் எனக் கூறப்பட்டது. அதன்படி இன்று பிற்பகலில் தலைமைச் செயலகம் வந்த வைகோ, முதலமைச்சர் விஜய்யை சந்தித்துப் பேசினார்.
இதனால் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறலாம் எனவும், மதிமுகவுக்கு திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
