சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட அப்பட்டமான அவதூறு நாடகம், சட்டமன்றத்தில் சபாநாயகர் அளித்த விளக்கத்தின் மூலம் சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளதாக தி.மு.க ஐடி விங் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், திரு.வி.க நகர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், அரசு மரபுகளை மீறி நடந்துகொண்டது தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி தான் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், திரு.வி.க நகர் அரசுப் பள்ளி நிகழ்வின் போது, அரசு மரபுகளை மீறி நடந்துகொண்டது தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவி தானே தவிர, மதிப்பிற்குரிய சென்னை மேயர் பிரியா அவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை சட்டமன்றத்தில் இன்று மாண்புமிகு சபாநாயகர் அவர்களே மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். இதன் மூலம் மேயர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பொய்கள் அனைத்தும் தவிடுபொடியாகி உள்ளன.
அரசுப் புரோட்டோகால் என்றால் என்னவென்றே அடிப்படை அறிவு இல்லாமல், ஒரு தலித் பெண் மேயர் உயர்ந்த பதவியில் அமர்ந்திருக்கிறார் என்ற வன்மத்தோடு, சமூக வலைதளங்களில் அவரைத் தரக்குறைவாக விமர்சித்த அந்த ‘Virtual Abusers’ கூட்டத்திற்கு சபாநாயகர் அவர்கள் தனது விளக்கத்தின் மூலம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளார்.
அரசு மரபுகள் பற்றி எந்தவொரு புரிதலும் இல்லாமல் இணையத்தில் திட்டமிட்டு அவதூறு பரப்பிக் கொண்டிருந்த கூட்டத்திற்கு, மிகத் தெளிவாகப் பாடம் எடுத்த சபாநாயகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இணையத்து ‘அறிவுஜீவிகள்’ இனியாவது அரசு மரபு மற்றும் முன்னுரிமைப் பட்டியல் என்றால் என்னவென்று படித்துத் தெரிந்துகொண்டு பேச வேண்டும் என தி.மு.க ஐடி விங் தனது அறிக்கையில் காட்டமாகத் தெரிவித்துள்ளது.
