செங்கல்பட்டு அருகே பள்ளி மாணவர்களை வற்புறுத்தி தவெகவினர் ரீல்ஸ் எடுத்த நிகழ்வு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கல்விக் கூடங்கள் என்பது அரசியல் சாயமற்ற புனித இடமாக இருக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் தங்களின் அரசியல் விளம்பரத்திற்காகப் பிஞ்சு குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளியையே தவெக நிர்வாகிகள் தங்களின் அரசியல் மேடையாக மாற்றியிருக்கும் அதிர்ச்சிச் சம்பவம் செங்கல்பட்டில் அரங்கேறியுள்ளது
தமிழக வெற்றி கழகத் தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் அவர்களின் 52-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன
அதன் படி செங்கல்பட்டு அடுத்த திருமணி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்குள் புகுந்த திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் தலைமையிலான தவெகவினர் தங்களின் அரசியல் எல்லையைத் தாண்டிக் குதித்துள்ளனர்
தோளில் கட்சித் துண்டைப் போட்டுக் கொண்டு கையில் விஜய் அவர்களின் புகைப்படத்தை ஏந்திக்கொண்டு பள்ளிக்குள் நுழைந்ததோடு நிற்காமல் அங்குள்ள சின்னஞ்சிறு மாணவ-மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களைக் கொடுத்துவிட்டு, ஹாப்பி பர்த்டே சி.எம் விஜய் சார்-னு சொல்லுங்க… பாட்டு பாடுங்க என்று மாணவர்களை வற்புறுத்தி கோஷமிட வைத்துள்ளனர்
அரசுப் பள்ளி வகுப்பறைக்குள்ளேயே முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை மாட்டி அதனைத் தங்களின் சுய விளம்பரத்திற்காக ரீல்ஸ் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

பள்ளிக்கூடம் இயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் வகையில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் முன்னிலையிலேயே இந்த அரசியல் அராஜகம் அரங்கேறியுள்ளது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது
அரசுப் பள்ளி என்பது அரசியல் ஆதாயம் தேடும் இடமா? பள்ளி நேரத்திற்குள் கட்சித் துண்டுடன் நுழைந்து அட்ராசிட்டி செய்த இந்த நபர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? என்ற கேள்விகள் வலுத்து வருகின்றன
அரசியல் முதிர்ச்சியில்லாமல் பள்ளி மாணவர்களை வைத்து ரீல்ஸ் விளையாட்டுக் காட்டிய இந்த நபர்கள் மீது தமிழக வெற்றி கழகத்தின் தலைமைக் கழகம் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டத்தை மீறி பள்ளிக்குள் அரசியல் புகுத்தியவர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
