திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, தபால் ஊழியர் ஒருவர் பொதுமக்களின் கடிதங்களை டெலிவரி செய்யாமல் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளகோவில் தபால் நிலையத்தில் பணிபுரியும் செந்தில்குமார் என்பவர், தட்டாந்தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தபால் நிலையத்திலிருந்து பொதுமக்களுக்கு வரவேண்டிய வங்கி ஏடிஎம் கார்டுகள், காசோலை புத்தகங்கள், ஓட்டுநர் உரிமங்கள், வருமான வரித்துறை தொடர்பான ஆவணங்கள் மற்றும் கல்லூரிக் சான்றிதழ்கள் என ஆயிரக்கணக்கான தபால்களை வீட்டின் பின்புறம் நீண்டகாலமாகப் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது, செந்தில்குமார் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள், அந்தப் பகுதி மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன், பக்கத்து வீட்டைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவரை நாய்கள் கடித்து காயப்படுத்தியதால், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டு, நகராட்சி அதிகாரிகள் நாய்களைப் பிடிக்க வந்தபோது, செந்தில்குமாரின் குடும்பத்தினர் அதிகாரிகளை மிரட்டி பணியைத் தடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சுத்தம் செய்யச் சென்றபோதுதான், வீட்டின் அருகே குவியல் குவியலாகக் கிடந்த தபால்கள் பொதுமக்களின் கண்களில் பட்டுள்ளன. 2022 முதல் 2026 வரை டெலிவரி செய்யப்பட வேண்டிய சுமார் 7 சாக்கு மூட்டைக்கும் அதிகமான முக்கிய ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டதுடன், சில தபால்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதும் தெரியவந்தது. பொதுமக்கள் தபால்களைப் பற்றித் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே, நாய்களைப் பாதுகாப்பிற்காக அவர் வளர்த்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
திருப்பூர் தலைமை தபால் நிலைய அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 மூட்டை தபால்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
