ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தெற்கு காஷ்மீரின் மீமந்தர் பகுதியில் உள்ள அடர்ந்த தோட்டத்தில், ஜூலை 3-ம் தேதி முதல் தேடுதல் வேட்டை நடைபெற்று வந்த நிலையில் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது.
கொல்லப்பட்ட பயங்கரவாதி குல்காமைச் சேர்ந்த ஜாகிர் கனாய் (Zakir Ganie) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த 2024-ம் ஆண்டு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் சேர்ந்தவர் என்றும், பாதுகாப்புப் படையினரின் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் ‘A+++’ பிரிவில் இருந்தவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவருடன் சேர்த்து மேலும் 2 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தக் கூட்டு நடவடிக்கையை சோபியான் சிறப்பு அதிரடிப் படை, ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை ஆகிய அமைப்புகள் இணைந்து மேற்கொண்டன. சம்பவ இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
என்கவுண்டர் நடைபெற்ற பகுதிகளில் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய தீவிர தேடுதல் மற்றும் தூய்மைப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்தத் தேடுதல் வேட்டை, தற்போது ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. அந்தப் பகுதி முழுமையாகப் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் குறித்து முறையாகத் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
