தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வரும் கோடை வெப்பம் மற்றும் வெயில் காரணமாக தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திங்கள்கிழமை அன்று ஒரே நாளில் 60.4 மில்லியன் யூனிட் (MU) சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு புதிய உச்சம் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்பு, 2026 ஏப்ரல் 18 அன்று 58.6 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்யப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.
தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் பகிர்மான கழகங்களின் வெளியிட்டுள்ள தரவுகளின்படி,
திங்கள்கிழமை மாநிலத்தின் மொத்த மின் நுகர்வு 429.057 மில்லியன் யூனிட் ஆக இருந்தது. பகல் நேர உச்ச மின் தேவையை பூர்த்தி செய்வதில் சூரிய மின் உற்பத்தி முக்கிய பங்காற்றியதுடன், அனல் மின் நிலையங்களைச் சார்ந்திருக்கும் தேவையும் குறைந்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 300 நாட்கள் தமிழகத்தில் போதிய சூரிய ஒளி கிடைப்பதால், சூரிய மின் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
மேலும், 2025 மார்ச் 31 நிலவரப்படி 10,153 மெகாவாட் இருந்த தமிழகத்தின் நிறுவப்பட்ட சூரிய மின் திறன், 2026 மே 31 நிலவரப்படி 13,909 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. அதாவது, ஓராண்டில் 3,756 மெகாவாட் கூடுதல் திறன் சேர்க்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் மேலும் 5,000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தித் திறனை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இந்த இலக்கு எட்டப்படும் எரிசக்தி துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
