புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆழ்கடலில் நிலையான மீன்பிடிப்புக்கான அங்கீகாரக் கடிதங்கள் வழங்கும் தேசியத் திட்டத்தை துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.
மேலும், ஒடிசா ஆழ்கடல் மீன்பிடித் திட்ட ஆவணத்தையும் அவர் வெளியிட்டார். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 மீனவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPPOs) மற்றும் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான அங்கீகாரக் கடிதங்களையும் துணைக் குடியரசுத் தலைவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய துணைக் குடியரசுத் தலைவர், இந்தியாவின் கடல்சார் வளர்ச்சிப் பயணத்தில் இந்தத் திட்டம் புதிய அத்தியாயத்தை தொடங்குவதாகக் குறிப்பிட்டார். இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலம் (Exclusive Economic Zone – EEZ) மற்றும் சர்வதேச ஆழ்கடல் பகுதிகளில் உள்ள வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதற்கு இந்திய மீனவர்களுக்கு இந்தத் திட்டம் வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். , “இளைஞர்கள் மீன்வளத் துறையை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நவீன தொழிலாகக் கருதி அதில் அதிகளவில் ஈடுபட வேண்டும்” எனவும் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
