தமிழ் சினிமாவின் மிக முக்கியமான, அறிவுத்திறன் மிக்க கலை ஆளுமைகளில் ஒருவரான தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான இரா. செழியன் (57), இன்று (ஜூலை 10) காலை சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.
பி.சி.ஸ்ரீராமின் பாசறையில்…
சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த செழியன், காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். பொறியியல் படித்திருந்தாலும், இளம் வயதிலிருந்தே அவருக்குள் நிழற்படக் கலையின் மீது அலாதியான ஆர்வம் இருந்தது. ஒளியையும் நிழலையும் கொண்டு காட்சிகளைப் பதிவு செய்யும் அந்த மாயாஜாலம் அவரை ஈர்த்ததால், தனது பொறியியல் பட்டத்தை விடுத்து சினிமா உலகிற்குள் நுழையத் தீர்மானித்தார்.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்து தனது சினிமாப் பயணத்தை செழியன் தொடங்கினார். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பள்ளியில் கற்றுக் கொண்ட நுட்பங்கள் இவருக்குள் இருக்கும் திறமையை மேலும் கூர்மையாக்கின. கடந்த 2007-ல் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த ‘கல்லூரி’ திரைப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக செழியன் அறிமுகமானார். கல்லூரி மாணவர்களின் எதார்த்தமான வாழ்வியலை, எவ்வித பகட்டும் இன்றி மிக இயல்பான ஒளியமைப்பில் காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
எதார்த்த சினிமாவின் தனித்துவ அடையாளம்
தொடர்ந்து தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாளிகளுடன் கைகோர்த்தார். இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் உருவான ‘ரெட்டைச்சுழி’, சீனு ராமசாமியின் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். தமிழ் சினிமாவிற்கு விஜய் சேதுபதியை நாயகனாக அறிமுகப்படுத்திய இப்படம், செழியனின் நேர்த்தியான கேமரா கண்களால் கிராமத்து அழகை அச்சு அசலாகப் பதிவு செய்திருந்தது.

அதைத் தொடர்ந்து, இயக்குநர் பாலாவின் பிரம்மாண்ட வரலாற்றுப் படைப்பான ‘பரதேசி’ (2013) திரைப்படத்தில் செழியன் காட்டிய உழைப்பு சர்வதேச அளவில் பேசப்பட்டது. தேயிலைத் தோட்டத்து அடிமைகளின் துயரத்தை வறண்ட, கடுமையான ஒளியமைப்பின் (High contrast shadows) மூலம் திரையில் கடத்தியதற்காக, லண்டன் சர்வதேச திரைப்படக் கலைஞர்களின் விழாவில் (London International Filmmaker Festival) சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை வென்றார். மேலும், பாலாவின் ‘தாரை தப்பட்டை’, தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ மற்றும் ‘கொன்றால் பாவம்’ உள்ளிட்ட பல முக்கியப் படங்களுக்கு இவர் ஒளியமைத்துள்ளார்.
மகுடம் சூடிய ‘டு லெட்’
ஒளிப்பதிவாளராகப் பல சாதனைகள் செய்த செழியன், 2017-ஆம் ஆண்டு ‘டு லெட்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்தார். சென்னை போன்ற பெருநகரங்களில் நடுத்தரக் குடும்பங்கள் வாடகை வீடு தேடி அலைகின்ற எதார்த்தமான, வலிகள் நிறைந்த துயரத்தை மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருந்தார். எந்தவொரு சினிமாத்தனமான சமரசமும் இன்றி எடுக்கப்பட்ட இத்திரைப்படம், 65-வது தேசியத் திரைப்பட விருதுகளில் ‘சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதை’ வென்றது.
அதுமட்டுமின்றி, கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவின் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும், மிலான் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதையும் என உலகளவில் 30-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வாரிக் குவித்து தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்த்தது.

ஆவணப்படங்கள்
வணிகச் சினிமாக்களைத் தாண்டி, குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் மீதும் இவருக்குத் தனி ஆர்வம் இருந்தது. இந்தியாவின் ஏவுகணை நாயகன், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் தமிழ் இலக்கிய உலகின் மாபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோரின் வாழ்வியலை ஆவணப்படங்களாக இயக்கிப் பதிவு செய்துள்ளார்.
செழியன் ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட. ’ஆனந்த விகடன்’ இதழில் அவர் எழுதிய உலக சினிமாக்கள் குறித்த கட்டுரைத் தொடர், பின்னாட்களில் ‘உலக சினிமா’ என்ற புத்தகமாக வெளியாகி, இன்றுவரை சினிமா பயிலும் மாணவர்களின் மிக முக்கிய வழிகாட்டியாகத் திகழ்கிறது. இவரது ‘ஹார்மோனியம்’ என்ற சிறுகதைக்காக மதிப்புமிக்க ‘கதா விருதையும்’ (Katha Award) பெற்றுள்ளார்.
அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டி
சினிமா மீது கொண்ட அளப்பரிய காதலால், ‘The Film School’ என்ற திரைப்படப் பள்ளியைத் தொடங்கி பல இளம் திறமையாளர்களை உருவாக்கினார். இவரது வழிகாட்டுதலில் அண்மையில் இவரது 34 மாணவர்கள் இணைந்து, ஒரே நேரத்தில் 34 சுயாதீனத் திரைப்படங்களை (Independent films) இயக்கும் பிரம்மாண்ட முயற்சியைத் தொடங்கி சாதனை படைத்தனர். சினிமாவை வியாபாரமாகப் பார்க்காமல் கலையாக மட்டுமே நேசித்த செழியன், பல படங்களுக்குப் பணத்தை எதிர்பாராமல் உழைத்துக் கொடுத்துள்ளார்.
“விரும்பித் தேர்ந்தெடுத்து இப்போதும் நான் ரசித்து ஈடுபடக்கூடிய ஒன்றாகவே ஒளிப்பதிவு இருக்கிறது” என்று பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டது, தொழில் மீது அவர் கொண்டிருந்த தீராக் காதலைக் காட்டுகிறது.
தனது கேமரா லென்ஸ் வழியே எதார்த்த மனிதர்களின் கதைகளைப் பேசிய செழியனின் கலை மீதான தேடலும், அவர் விட்டுச் சென்றப் படைப்புகளும் என்றும் அழியாமல் வாழும்.
– பா. முகிலன்
