தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, செய்தியாளர்களிடம் பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
திமுகவும் அதிமுகவும் ஒரே கூட்டணி என்ற முதல்வர் விஜய்யின் விமர்சனம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “கேட்காத விஷயத்திற்கு நான் பதில் சொல்ல முடியாது” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய ஆட்சியில் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் செல்லக் கூடாத இடங்களுக்குச் சென்று பொதுமக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டினார். பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுவதாகவும் விமர்சித்தார்.
மேலும், “இத்தகைய செயல்களில் முதலமைச்சரே ஈடுபடும்போது, இந்த ஆட்சி எந்த திசையை நோக்கிச் செல்கிறது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது” என்றார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பேசிய கனிமொழி, அது விசாரணையில் உள்ள விவகாரம் என்பதால் அதிகம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார். அதேவேளையில், “கரூர் சம்பவத்தின் போது மக்களோடு நின்றவர்கள் யார், மக்களுக்கு உதவி செய்தவர்கள் யார், மக்களைச் சந்திக்காமல் ஓடிப்போனவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று கூறினார்.
திமுக நிர்வாகிகள் வெளிநாடு சென்றது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழக முதல்வரின் முகத்தைப் பார்க்க நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
