சமூக ஊடக நிறுவனமான மெட்டா, கனடாவில் தனது முதல் டேட்டா சென்டரை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆல்பெர்டா மாகாணத்தின் ஸ்டர்ஜன் கவுண்டியில் 1 ஜிகாவாட் (1GW) திறன் கொண்ட, செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டிற்கு ஏற்ற புதிய டேட்டா சென்டர் அமைக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்திற்காக 13 பில்லியன் கனடிய டாலருக்கும் அதிகமாக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.80 ஆயிரம் கோடிக்கு மேல்) மெட்டா முதலீடு செய்ய உள்ளது. உலகளவில் மெட்டா அமைக்கும் 33-வது டேட்டா சென்டர் இதுவாகும்.
இந்த டேட்டா சென்டர், மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு சேவைகள் மற்றும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் அதன் முக்கிய தயாரிப்புகளுக்கு தேவையான கணினி உள்கட்டமைப்பை வழங்கும்.
இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளின் உச்சகட்டத்தில் சுமார் 3,000 தொழிலாளர்கள் பணியாற்றுவார்கள். டேட்டா சென்டர் முழுமையாக செயல்படத் தொடங்கிய பிறகு 300-க்கும் மேற்பட்ட நிரந்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், உள்ளூர் சாலைகள் மற்றும் நீர் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சுமார் 60 மில்லியன் கனடிய டாலர் முதலீடு செய்யப்பட உள்ளது. அத்துடன், சமூக நல அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கும் Data Center Community Action Grants திட்டமும் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும்.
இந்த டேட்டா சென்டருக்குத் தேவையான மின்சாரம் 100 சதவீதம் சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் ஈடுசெய்யப்படும் என்றும், மின்சார பயன்பாட்டுக்கான முழுச் செலவையும் மெட்டா நிறுவனமே ஏற்கும் என்பதால் பொதுமக்கள் மீது கூடுதல் சுமை ஏற்படாது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீர் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், மூடிய சுற்று (Closed-loop), திரவ குளிரூட்டும் (Liquid-cooled) மற்றும் உலர் குளிரூட்டும் (Dry Cooling) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், குளிரூட்டும் அமைப்பில் செயல்பாட்டு நீர் பயன்பாடு இருக்காது. குடிநீர், தீயணைப்பு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைகளுக்கு மட்டுமே நீர் பயன்படுத்தப்படும்.
2030-க்குள் உலகளவில் தாங்கள் பயன்படுத்தும் நீரை விட அதிக அளவு நீரை இயற்கைக்கு மீட்டளிக்கும் “Water Positive” இலக்கை எட்ட மெட்டா நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் குறித்து மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்டர்ஜன் கவுண்டி எங்களின் புதிய டேட்டா சென்டரின் இல்லமாக மாறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். உள்ளூர் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு, அதன் வளர்ச்சிக்கு நேர்மறையான பங்களிப்பை வழங்க ஆவலுடன் இருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
