திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், முதியவர்கள் எளிமையாகவும் விரைவாகவும் சுவாமியை தரிசனம் செய்ய ஆந்திர அரசு புதிய ஏற்பாட்டை செய்துள்ளது.
65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வெறும் 30 நிமிடங்களில் தரிசனத்தை முடிக்கும் வகையில் “இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டத்தை” ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை முதியவர்கள் தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் தங்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (உதாரணமாக ஆதார் அட்டை) மற்றும் வயதுச் சான்றை கவுண்டர் எஸ்-1-ல் (S-1) காண்பிக்க வேண்டும். ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு, கோயிலின் வலது சுவரையொட்டி, பாலத்திற்கு கீழ் உள்ள மண்டபத்தின் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இந்த வழியில் படிக்கட்டுகள் எதுவும் கிடையாது என்பதால் முதியவர்கள் சிரமமின்றி எளிதாக நடந்து செல்லலாம். இந்த பிரத்யேக வரிசைக்குள் நுழைந்தவுடன், வெறும் 30 நிமிடங்களில் ஏழுமலையானை மிக அருகில் தரிசித்துவிட்டு வெளியே வந்துவிடலாம்.
தரிசனத்தை முடித்து வரும் முதியவர்கள் அனைவருக்கும் சூடான சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பால் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. வாகன நிறுத்துமிடத்தில் (Parking) இருந்து தரிசன கவுண்டருக்கும், தரிசனம் முடிந்த பிறகு அங்கிருந்து வெளியேறும் வாயிலுக்கும் முதியவர்கள் எளிதாகச் செல்ல இலவச பேட்டரி கார் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய திட்டத்தின் மூலம் முதியவர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்துக்கிடக்க வேண்டிய அவசியமின்றி, எவ்வித உடல் உபாதைகளும் இல்லாமல் நிம்மதியாக ஏழுமலையானை தரிசனம் செய்து வரலாம்.
