விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ அங்காளம்மன் பரமேஸ்வரி ஆலயத்தில், ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில், ஆனி அமாவாசை தினமான நேற்று (ஜூலை 14) அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டது. மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு நெய், தயிர், சந்தனம், வாசனை திரவியங்கள் மற்றும் பல வண்ண மலர்களால் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து, உற்சவர் அங்காளம்மன் ‘ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி’ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அமாவாசை தினம் என்பதால் காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான ஊஞ்சல் உற்சவம் இரவு 11 மணியளவில் தொடங்கியது. உற்சவர் அம்மனைத் தங்களது தோள்களில் சுமந்து, வடக்கு வாயில் எதிரே உள்ள ஊஞ்சல் மேடைக்குக் கொண்டு வந்தனர்.
அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து, தாலாட்டுப் பாடல்களைப் பாடி ஊஞ்சலை அசைத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், தங்களது கைகளில் கற்பூரம் ஏற்றி, “அங்காளம்மா தாயே… அருள்புரிவாயே!” என பக்தி முழக்கமிட்டு பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மேல்மலையனூருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
