ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள கொமரப்பாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் அப்பகுதியில் பெரிய அளவிலான நாட்டுக்கோழிப் பண்ணையை நடத்தி வருகிறார். சுமார் 7,000-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி குஞ்சுகளைப் பராமரித்து வரும் இவர், இந்தத் தொழிலையே தனது வாழ்வாதாரமாக நம்பியுள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு பண்ணைக்குள் நுழைந்த வெறிநாய்கள், அங்கிருந்த கோழிக்குஞ்சுகளைக் கடித்துக் குதறின. இதில், இரண்டு மாதங்களே ஆன 600-க்கும் மேற்பட்ட குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தன. ஒரே இரவில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த விவசாயி கணேசன் மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்ந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கணேசன், உடனே கால்நடைத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை மருத்துவர்கள், பண்ணையில் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளதாகவும், பண்ணையை நம்பி இருந்த தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயி கணேசன் தெரிவித்துள்ளார். எனவே, தமிழக அரசு இந்தச் சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார்.
