ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெ. பாலசுப்பிரமணி தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக கூறப்படும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், சீனிவாசன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்வைத்ததாகக் கூறப்படும் குதிரை பேர குற்றச்சாட்டுகளையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையின் போது, குதிரை பேரம் தொடர்பான புகாரில் மாநில காவல்துறை ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும், செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்திகள் அல்லது சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் மட்டும் ஒரு புலனாய்வு அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்புக்கு விசாரணையை மாற்ற முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மாநில காவல்துறையின் விசாரணை முற்றிலும் முடங்கியிருப்பது அல்லது உண்மையை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டிருப்பது போன்ற விசேஷ சூழ்நிலைகளில் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியும் என்றும் நீதிமன்றம் விளக்கியது.
அத்துடன், பொதுநல வழக்குகள் என்பது சமூகத்தில் குரலற்ற மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் சக்திவாய்ந்த சட்ட ஆயுதமாகும். அவை பொதுநலனுக்காகவும், சட்டத்தின் ஆட்சியை அனைவருக்கும் சமமாக உறுதிப்படுத்தவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, சிபிஐ விசாரணை கோரிய பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
