முதலமைச்சர் விஜய், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி மக்களின் குறைகளைக் களைவதற்காகத் தொடங்கிய பிரத்யேக இணையதளத்தில் பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தவெக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ அலுவலகத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், தொகுதி மக்கள் தங்களது குறைகளை நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்தினார். இதில் பதிவாகும் புகார்கள் நேரடியாக நடவடிக்கைக்காகக் கொண்டு செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இணையதளத்தில் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட எண்ணிக்கை பூஜ்ஜியமாகவே காட்டப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதுகுறித்து விளக்கமளித்த தவெக பெரம்பூர் மாவட்டச் செயலாளர் சிவா, “இந்த இணையதளம் பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட 7 வார்டு மக்களின் தேவைகளுக்காகவே உருவாக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் இதில் தங்களது புகார்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட அதிகக் நெரிசல் காரணமாக இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்த விவரங்களைப் பதிவேற்றம் செய்ய இயலவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், “பெரம்பூர் தொகுதி சார்ந்த புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுத் தீர்வு காணப்பட்டு வருகிறது. தற்போது பெரம்பூர் தொகுதி மக்கள் மட்டுமே புகார்களைப் பதிவு செய்யும் வகையில் இணையதளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இனிவரும் நாட்களில் தீர்க்கப்பட்ட புகார்களின் புள்ளிவிவரங்கள் இணையதளத்தில் சரியாகப் புதுப்பிக்கப்படும்” என சிவா குறிப்பிட்டுள்ளார்.
