நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் தன்மை கொண்ட அரிய வகை குறிஞ்சி மலர்கள் தற்போது பூக்கத் தொடங்கியுள்ளன. சங்ககால இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் என்று வர்ணிக்கப்பட்ட இப்பகுதியில், சமீபத்தில் பெய்த தொடர்மழையால் காடுகள் அனைத்தும் பச்சை பசேலென மாறி இயற்கை எழிலுடன் காணப்படுகின்றன.
கூடலூரை அடுத்த ஜீன் பூங்கா மற்றும் பெரிய சோலை போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் ‘ஸ்ட்ரோபிலாத்தஸ் குந்தியானா’ எனப்படும் ஊதா மற்றும் நீல நிற குறிஞ்சி மலர்கள் கொத்துக்கொத்தாக மலர்ந்துள்ளன. இதனால் மலைப்பகுதிகள் முழுவதும் இயற்கையாகவே நீல நிறக் கம்பளம் விரிக்கப்பட்டது போன்ற ஒரு கண்கவர் மற்றும் மயக்கும் தோற்றம் உருவாகியுள்ளது.
இன்னும் ஒரு வார காலத்தில் இந்த மலர்கள் முழுமையாக மலர்ந்து இப்பகுதி முழுவதையும் மேலும் ரம்யமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அபூர்வக் காட்சியைத் தங்களின் கண்களால் கண்டு களிக்க உள்ளூர் மக்களும், இப்பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் மலைப்பகுதிகளுக்கு ஆர்வமுடன் சென்று பூக்களை ரசித்து வருகின்றனர்.
