கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்கிய அரசுப் பணியை ரத்து செய்த உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டர் கோரிக்கை வைத்துள்ளார்.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்ற தவெக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் தகுதியுள்ள 31 பேருக்கு, கடந்த ஜூலை 10-ம் தேதி கரூர் சென்ற முதலமைச்சர் விஜய் அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கியிருந்தார்.
அரசு வேலை வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இன்று (ஜூலை 27) தீர்ப்பளித்தது. அதில், தற்காலிகப் பணி நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைச் சுட்டிக்காட்டி, 31 பேருக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, கரூர் சம்பவத்தில் உயிரிழந்த ரவி கிருஷ்ணாவின் தாயார் ஞானாம்பாள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், எனது மகன் ரவி கிருஷ்ணாவை இழந்த துயரத்தில் இருந்த எங்களுக்கு, என் மகள் பிரியதர்ஷினிக்கு பரமத்தி யூனியன் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக என் மகள் அப்பணியில் ஈடுபாட்டுடன் பணியாற்றி வந்தாள். தற்போது நீதிமன்றம் இந்த வேலையை ரத்து செய்திருப்பது எங்களை மீண்டும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வறுமை மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு, உயர்நீதிமன்றம் கருணையோடு பரிசீலனை செய்து எங்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை வைத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
