விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர் ‘சிறகடிக்க ஆசை’யில் ரோகிணியின் மலேசியா மாமாவாகவும், கறிக்கடைக்காரராகவும் நடித்து ரசிகர்களின் அன்பை வென்ற நடிகர் வி.சி. ஜெயமணி, திடீர் மாரடைப்பால் காலமானார். சென்னை வடபழனியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று (ஜூலை 28) இரவு இச்சம்பவம் நடந்தது. அவர் தனது 76வது வயதில் மறைந்தார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமதி செல்வம்’ தொடரில் பூங்காவனம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றவர் ஜெயமணி. அதன்பிறகு பல தொடர்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். சமீப ஆண்டுகளில் சில காலம் திரையில் தென்படாமல் இருந்த அவர், கடந்த ஆண்டு ‘சிறகடிக்க ஆசை’யில் மீண்டும் அறிமுகமானார்.
ரோகிணிக்கு ஆதரவாகவும், குடும்ப ரகசியங்களை வெளிப்படுத்தும் முக்கிய கதாபாத்திரமாகவும் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. குறைந்த எபிசோடுகளுக்காக வந்த அவர், பின்னர் அதிக காட்சிகளில் இடம்பெற்று தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரசிகர்கள் முன்வைத்தனர்.
குழந்தை நட்சத்திரமாக நாடகங்களில் தொடங்கிய அவர், சுமார் 40 தொடர்களை இயக்கியுள்ளார். ஆர்.ஜே. பாலாஜி நடித்த ‘சொர்க்கவாசல்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சங்கம் மற்றும் டப்பிங் யூனியன் உறுப்பினராகவும் பணியாற்றியவர். அவரது மனைவி மாலதி டப்பிங் கலைஞராகவும், மகள் நந்தினி ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.
அவரது மறைவு செய்தி வெளியானதும் சின்னத்திரை கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சமூக வலைதளங்களில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயல்பான நடிப்பால் பலரின் மனதை கவர்ந்த ஜெயமணியின் மறைவு தமிழ் சின்னத்திரைக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது.
