காவிரி நதிநீர்ப் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்துச் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீரைத் திறந்து விடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்ட போதிலும், கர்நாடக அரசு அதனைச் செயல்படுத்தாமல் தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும், மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்தச் சூழலில், காவிரி மற்றும் மேகதாது விவகாரத்திற்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சியாக, முதலமைச்சர் விஜய் கர்நாடகாவிற்கு நேரில் சென்று அம்மாநில நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்தச் சந்திப்பிற்குத் தமிழ்நாட்டின் விவசாயச் சங்கங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த கன்னட அமைப்புகள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதனையடுத்து இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில், சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், தலைமைச் செயலாளர் மற்றும் நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் காவிரியிலிருந்து உரிய நீரைப் பெறுவது, மேகதாது அணை திட்டத்திற்குத் தீவிர எதிர்ப்பு தெரிவிப்பது மற்றும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்தும் முக்கிய முடிவுகள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
