ஈரோடு சிக்கய்ய நாயக்கர் அரசு கலைக் கல்லூரியில், பள்ளிக்கல்வித் துறையும் மக்கள் சிந்தனை பேரவையும் இணைந்து நடத்தும் 22-வது புத்தகத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. இன்று முதல் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்புத்தகத் கண்காட்சியில், சென்னை மற்றும் தில்லி உள்ளிட்ட பெருநகரங்களைச் சேர்ந்த முன்னணிப் பதிப்பகங்களின் 230-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியைப் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோர் இணைந்து குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர்.
12 நாட்கள் நடைபெறும் இப்புத்தகக் கண்காட்சியில் உலகத் தமிழர்களின் படைப்புகள் மற்றும் கீழடி நாகரிகத்தின் தொல்லியல் துறை ஆராய்ச்சிகளை விளக்கும் பிரத்யேகக் கண்காட்சி அரங்குகள் இடம்பெற்றுள்ளன. மேலும், பிரபல நீதிபதிகள் மற்றும் தமிழறிஞர்கள் கலந்துகொள்ளும் சிறப்புச் சொற்பொழிவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.’
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், பொதுமக்கள் அனைவரும் தங்களின் இல்லங்களில் நடைபெறும் திருமணம் மற்றும் இதர நல்விழாக்களுக்கு வரும் விருந்தினர்களுக்குப் புத்தகங்களைப் பரிசாக வழங்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டிய சொத்து பணம் மட்டுமல்ல, அறிவுச் செல்வமே ஆகும். வீதிதோறும் தமிழ் நூல்கள் செழித்து, வாசிப்போர் வட்டம் பெருக வேண்டும் என்றார்.
மேலும் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளையும் ஒரே மேடையில் அழைத்து, அவர்களது கோரிக்கைகள் மற்றும் நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குறித்து கடந்த இரண்டு நாட்களாகத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். காலி பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் தகுதி அடிப்படையில் விரைவில் நிரப்பப்படும்.
பள்ளிகளில் நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில பள்ளிகளில் விளையாட்டு மைதானம் மற்றும் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மைதானம் இல்லாவிட்டாலும், எந்தச் சூழலிலும் உடற்கல்வி நேரத்தை ரத்து செய்யக் கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி நேரங்களில் ஆய்வுகள் என்ற பெயரில் சமூக வலைதளங்களுக்காக ரீல்ஸ் அல்லது வீடியோக்கள் எடுப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏற்கெனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான கட்சி மற்றும் நிர்வாக நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். ஆய்வுகள் மேற்கொள்ள மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
மதிய உணவில் சிக்கன் பிரியாணி: அரசுப் பள்ளிகளில் கல்விப் புரட்சியுடன் நீதிக்கட்சி, காமராஜர், கலைஞர் மற்றும் அம்மா காலகட்டங்களில் உணவுப் புரட்சியும் இணைந்து வளர்ந்தது. மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்க எனக்கு தனிப்பட்ட முறையில் ஆசை உள்ளது; இதுதொடர்பான பரிசீலனை மற்றும் ஆய்வுகள் நடந்து வருகின்றன, இதுகுறித்து முதலமைச்சரிடம் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.
நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன் போன்றோரின் கருத்துகள் குறித்துப் பேசிய அவர், “உணவை ஒரு உயிர் பொருளாகவே பார்க்கிறேன். சைவக் குழந்தைகள் சைவம் சாப்பிடட்டும்; அசைவக் குழந்தைகள் சிக்கன் பிரியாணி சாப்பிடட்டும். குழந்தைகளுக்குப் புரதச்சத்து மிகவும் அவசியம். சிக்கன் பிரியாணி சாப்பிட்டால் குழந்தைகள் கெட்டுப்போய்விட மாட்டார்கள். இதில் யாரும் அரசியலைத் திணிக்க வேண்டாம்; இதுகுறித்து முதலமைச்சர் நல்லதொரு முடிவை எடுப்பார்” என்றார். மேலும், மாணவர்களின் சீருடையிலும் காலத்திற்கேற்ப மாற்றங்கள் கொண்டுவரப்படும் எனவும், வரவிருக்கும் பட்ஜெட்டில் கல்வித்துறைக்குக் கூடுதல் அறிவிப்புகள் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேகதாது பிரச்சனை குறித்து பேச முதலமைச்சர் கர்நாடகா செல்கிறாரா.? என்று நிரூபர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், இது இன்னும் உறுதி செய்யப்படாத தகவல். முதல்வர் உரிய நேரத்தில் அறிவிப்பார் என்றார். மேலும், நீர்வளத்துறை அமைச்சர் ஏன் பேச மறுக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த ராஜ்மோகன், அமைச்சர் ஆனந்த் அவசரமாக சென்றதால் செய்தியாளர்களிடம் பேசவில்லை. பரபரப்பாக அவசர வேலையாக அன்று சென்றார். அவருக்கு இந்த துறையில் தெரியாதது எதுவும் இல்லை. உரிய நேரதரதில் நீர்வளத்துறை அமைச்சர் பேசுவார். பேசாமல் சத்தமில்லாமல் பல சாதனைகளை செய்வார் என்றார்.
