கோவை மருதமலை அருகே லெப்ரஸ் காலனி பகுதியில் அரிய வகை கருஞ் சிறுத்தை ஒன்று நடமாடும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மருதமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது வழக்கமான ஒன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தற்போது மலைப் பாறைகளுக்கு இடையே கருஞ் சிறுத்தை ஒன்று சர்வ சாதாரணமாகத் தாவி குதித்து கீழே இறங்கி வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அப்பகுதியை சேர்ந்த ஒருவரால் செல்போனில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
குடியிருப்புப் பகுதிக்கு மிக அருகில் கருஞ் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், லெப்ரஸ் காலனி மற்றும் மருதமலை பகுதி மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். பொதுமக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், சிறு குழந்தைகள் மற்றும் வளர்ப்புப் பிராணிகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு சிறுத்தையின் நடமாட்டத்தைக் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
