தமிழ்நாட்டின் வறுமையை ஒழித்து, 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கான தெளிவான திசையை இந்த தமிழ்நாடு அறிமுக பட்ஜெட் காட்டுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள மாணிக்கம் தாகூர், பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் (₹710 கோடி) மற்றும் மாதிரிப் பள்ளிகள் (₹125 கோடி) மூலம் கல்வியிலும், கல்லூரி மாணவர்களுக்கான ‘வெற்றி மடிக்கணினி‘ (₹2,000 கோடி) திட்டம் மூலம் டிஜிட்டல் கற்றலிலும், பெண்களுக்கு ‘அண்ணன் சீர்‘ (₹812 கோடி) மற்றும் சிங்கப்பெண் படை மூலம் மகளிர் நலனிலும் தொலைநோக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள், இளைஞர் நலன், போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவற்றுடன் இந்தியாவின் முதல் AI நகரம் ‘அறிவகம்‘ மற்றும் திருநெல்வேலி–தூத்துக்குடி ‘விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம்‘ போன்ற அறிவிப்புகள் மனிதவள மேம்பாட்டிற்கும் தென் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கும் வலு சேர்ப்பதாகக் கூறியுள்ளார்.
உயர்கல்வித் துறைக்கான ஒதுக்கீடு (₹8,393 கோடி), ‘வெற்றி மடிக்கணினி‘ (₹2,000 கோடி) திட்டம் மற்றும் சுற்றுலாத் துறைக்கான நிதி ஒதுக்கீடு போன்றவை மாநிலத்தின் ஒட்டுமொத்தத் தேவைகளுடன் ஒப்பிடுகையில் கவனிக்கத்தக்க அளவிலேயே உள்ளதாக கூறியுள்ள மாணிக்கம் தாகூர்,
வருவாய் கசிவுகளைத் தடுத்து, நிதி நிர்வாகத்தைச் சீரமைத்து, ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தின் மூலம் மனிதவளத்தில் நீண்டகால முதலீடுகளைச் செய்ய தமிழ்நாடு அரசுக்கு தேவையான கால அவகாசம் வழங்கி, இத்திட்டங்கள் களத்தில் முழுமையாகச் செயல்படுத்தப்படுவதை எதிர்நோக்குவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
