ராமநாதபுரம் மாவட்டம் கமுதி – அருப்புக்கோட்டை சாலையில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். கையில் வாளுடன் வந்த அவர்கள், விடுதியின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விடுதியின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கமுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, அந்த மர்ம நபர்கள் விடுதி மீது பெட்ரோல் குண்டு வீசும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுத் தப்பியோடிய குற்றவாளிகளைக் காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
