கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த விளாத்திகுளம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், நீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று நேரில் வந்து கையெழுத்திட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலவரம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்குப் பல முதலீடுகள் சென்றுவிட்டதாகவும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வந்தால் வழக்கு போட்டுவிடுவார்களோ என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே நிலவுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தி.மு.க.வினரைக் கைது செய்து முடக்கிவிடலாம் என்று யாரும் கனவு காண வேண்டாம் என்று குறிப்பிட்ட அவர், தி.மு.க. எதற்கும் அச்சப்படும் கட்சியல்ல என்றும், ஜனநாயக முறையில் கருத்துக்களை வெளிப்படுத்தும் வலிமையான இயக்கம் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழக முதல்வர் பக்குவமாக நடந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், ஆனால் இந்த அரசு தங்களை ஏதோ சர்வதேச குற்றவாளிகள் போல நடத்திக் காவல்துறையைக் குவித்து பயமுறுத்துவதாகவும் அவர் குறை கூறினார்.
மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் எந்தவொரு தேர்தல் வாக்குறுதித் திட்டமும் இடம்பெறவில்லை என்று சாடிய அவர், ஜனநாயகம் எங்கு மறுக்கப்படுகிறதோ அது வெற்றிடமாகிவிடும் என்றார். முன்னாள் அமைச்சர் சேகர்பாபு திருத்தணியில் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்த கேள்விக்கு, அவர் ஒரு பக்திமான் என்றும், பகவான் கொடுத்த சோதனையைப் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டு சாமி கும்பிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், நேற்று சட்டமன்றத்தில் தான் பேசியதை மறந்துவிடுமாறு சபாநாயகரிடம் கூறியது குறித்த கேள்விக்கு, தூத்துக்குடி மண்ணுக்கே உரித்தான வேகத்தையும் விவேகத்தையும்தான் வெளிப்படுத்தியதாகவும், அதைச் சட்டப்பேரவையில் மேலும் விவாதித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பதற்காகவே அவ்வாறு சொன்னதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
