நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து மத்திய பாஜக அரசு முன்னெடுக்கும் நகர்வுகளையும், அதனால் ஏற்படும் ஆபத்துகளையும் விமர்சித்து ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேட்டியளித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை குறித்து நேற்று முதலமைச்சர் விஜய் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக, அதிமுக உறுப்பினர்கல் பங்கேற்காத நிலையில், காங்கிரஸ் (11), விசிக (2), இந்திய கம்யூனிஸ்ட் (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2), ஐயுஎம்எல் (1) மற்றும் மதிமுக (1) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில், கூட்டத்தில் என்ன நிலைபாடு எட்டப்பட்டது என்பது குறித்து துரை வைகோ எம்.பி. செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, அனைத்து மாநிலங்களிலும் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை உயர்த்துவதாகக் கூறி, தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு திரட்ட பாஜக முயன்று வருகிறது. சில எதிர்க்கட்சிகளும் இது நல்ல திட்டம் என நினைத்து ஆதரவு தெரிவிக்கின்றன.
ஆனால், இடங்களை 50% அதிகரித்தாலும், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அது மறுபகிர்வு செய்யப்படும்போது, பல மாநிலங்களுக்குப் பாதகமாகவே அமையும். மேலும், தன்னிச்சையாக முடிவெடுக்கும் வகையிலான சர்வாதிகார அதிகாரங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொகுதி மறுவரையறை ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
1975-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாட்டிற்கான 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கை எக்காரணம் கொண்டும் குறையக்கூடாது; அது அப்படியே தொடர வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே தனது முடிவு என்று முதலமைச்சர் விஜய் கூறியதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.
அதாவது, தொகுதி மறுவரையறை விவகாரத்தைப் பொறுத்தவரை, அதனை எந்த வகையிலும் ஏற்க முடியாது எனத் தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகமும் ஏற்கனவே ஏப்ரல் மாதத்திலேயே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். தொகுதி மறுவரையறையை ஆதரிக்கக் கூடாது என்ற அந்த முடிவையே தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
பாஜகவின் இந்தத் திட்டத்தை சில எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்களில் ஆதரித்துப் பேசி வருவது, அவர்கள் பாஜகவுடன் மறைமுக ஒப்பந்தம் செய்துள்ளார்களோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. தற்போதே அரசியலில் சிறுபான்மையினருக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லை. இந்தச் சூழ்நிலையில், தொகுதி மறுவரையறையை ஆதரிப்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும், குறிப்பாகச் சிறுபான்மை மக்களுக்கும் மிகப்பெரிய ஆபத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.
