மனித வாழ்நாளின் இறுதிக்காலத்தில் ஏற்படும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று ‘டிமென்ஷியா’ (Dementia) எனப்படும் நினைவாற்றல் இழப்பு அல்லது மறதி நோய் ஆகும். பல நேரங்களில் இது வயது முதிர்வின் காரணமாக ஏற்படும் ஒரு தவிர்க்க முடியாத ‘தலைவிதி’ என்றே பலரால் பார்க்கப்படுகிறது. ஆனால், மருத்துவ உலகம் அந்தப் பார்வையை முற்றிலும் உடைத்தெறிந்துள்ளது.
சமீபத்தில் புகழ்பெற்ற சர்வதேச மருத்துவ இதழான ‘தி லான்செட் ஹெல்தி லாங்கிவிட்டி’ (The Lancet Healthy Longevity) வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு முடிவு, நம் அன்றாட வாழ்க்கை முறையைக் கட்டுப்படுத்துவதன் மூலமே ’டிமென்ஷியா’ அபாயத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், பிரவுன் பல்கலைக்கழகம் மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, இந்தியா, சீனா, இங்கிலாந்து, பிரேசில் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் தரவுகளைக் கொண்டு இந்த மாபெரும் ஆய்வை நடத்தியுள்ளனர். இந்தியாவின் ‘லாங்கிட்யூடினல் ஏஜிங் ஸ்டடி’ (LASI) தரவுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரட்டை ஆபத்து: ஆய்வு சொல்லும் கசப்பான உண்மை
இந்த ஆய்வில், ஒரு மனிதனின் மறதி நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய, ஆனால் நம்மால் மாற்றியமைக்கக்கூடிய (Modifiable Risk Factors) 12 முக்கியக் காரணிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. காது கேளாமை, மனச்சோர்வு, உடற்பயிற்சியின்மை, சமூகத் தனிமை, குறைந்த கல்வி அறிவு, உடல் பருமன் போன்ற காரணிகள் இதில் அடங்கும்.
இந்த ஆய்வின் மிக அதிர்ச்சிகரமான கண்டுபிடிப்பு என்னவென்றால், உலகளவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான முதியவர்களிடம், இந்த 12 ஆபத்துக் காரணிகளில் குறைந்தபட்சம் இரண்டு காரணிகளாவது ஒன்றாகக் காணப்படுகின்றன. அதாவது, பாதிக்கும் மேற்பட்ட உலக மக்கள் ஏதோ ஒரு வகையில் டிமென்ஷியா நோயை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். இதய நோய்கள், புகைபிடித்தல், மதுப்பழக்கம், மற்றும் சமூகத் தனிமை போன்ற காரணிகள் உலகெங்கிலும் உள்ள மனிதர்களிடம் ஒரே மாதிரியான கூட்டுக் குழுக்களாக (Clusters) ஒன்றிணைந்து செயல்படுவது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பணக்கார நாடுகள் Vs ஏழை நாடுகள்
டிமென்ஷியாவுக்கான காரணிகள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தாலும், வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் அல்லது நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கும் இடையே இந்த ஆபத்துகளின் பரவலில் பெரும் வேறுபாடுகள் உள்ளன.
உதாரணமாக, கல்வி அறிவு குறைவாக இருப்பது டிமென்ஷியாவுக்கான ஒரு முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. சீனாவில் 85.6 சதவீத முதியவர்கள் இந்தத் தடையை எதிர்கொள்கின்றனர்; ஆனால் அமெரிக்காவில் இது வெறும் 12 சதவீதமாக மட்டுமே உள்ளது. நேர்மாறாக, தவறான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையால் ஏற்படும் அதிக உடல் பருமன் (High BMI) அமெரிக்காவில் 44.9 சதவீத முதியவர்களைப் பாதித்துள்ளது. ஆனால், இந்தியாவின் எதார்த்த சூழலில் இது வெறும் 13.3 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதன் மூலம், ஒவ்வொரு நாட்டின் சமூக, பொருளாதாரக் கட்டமைப்பிற்கு ஏற்ப மனிதர்களின் ஆரோக்கியச் சவால்களும், அதன் விளைவாக எழும் மறதி நோய் அபாயங்களும் மாறுபடுகின்றன என்பது தெளிவாகிறது.
மருத்துவக் கொள்கைகளில் மாற்றத்திற்கான தேவை
இந்த ஆய்வின் முதன்மை விஞ்ஞானியான எம்மா நிக்கோல்ஸ் குறிப்பிடுகையில், “உலகெங்கிலும் இந்த ஆபத்துக் காரணிகள் ஒரே மாதிரியான கூட்டுக் குழுக்களாக (Cardiometabolic Clusters) மனித உடலில் செயல்படுவதுதான் எங்களை வியப்பில் ஆழ்த்தியது” என்கிறார். உதாரணமாக, நீரிழிவு நோய் உள்ள ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எனவே, சுகாதார அமைப்புகள் தனித்தனி நோய்களுக்குத் தனித்தனியாகச் சிகிச்சை அளிப்பதை விடுத்து, இந்த ஒட்டுமொத்தக் கூட்டுக் காரணிகளையும் ஒரே நேரத்தில் குணப்படுத்தும் ஒருங்கிணைந்த மருத்துவ உத்திகளை (Integrated Interventions) வடிவமைக்க வேண்டும். நீரிழிவு நோய்க்கான ஒரு திட்டத்தை, இதய ஆரோக்கியம் மற்றும் மூளை ஆரோக்கிய மேம்பாட்டுடன் இணைத்துச் செயல்படுத்தும் போது, அது டிமென்ஷியா ஏற்படுவதையும் சேர்த்தே தடுக்கும்.
ஆபத்து முன்கூட்டியே எழுதப்பட்டதல்ல
இந்த ஆய்வின் மூலம் சாமானிய மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், டிமென்ஷியா என்பது வயதான காலத்தில் நமக்கு வரப்போகும் ஒரு தவிர்க்க முடியாத விதி அல்ல. நம் வாழ்நாளின் வெவ்வேறு காலகட்டங்களில் நாம் எதிர்கொள்ளும் அல்லது பழகிக்கொள்ளும் காரணிகளே மூளையின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கின்றன.
முறையான கல்வி, தொடர்ச்சியான உடற்பயிற்சி, சத்தான உணவுமுறை, புகை மற்றும் மதுப் பழக்கத்தைத் தவிர்த்தல், இதய ஆரோக்கியத்தைப் பேணுதல், மற்றும் வயதான காலத்திலும் சமூகத்தோடு தொடர்பில் இருத்தல் ஆகியவற்றின் மூலம் இந்த ஆபத்தை நாம் பெருமளவு குறைக்க முடியும். சமூகக் காரணிகள் நம் ஆரோக்கியத்தை வடிவமைத்தாலும், நம் பழக்கவழக்கங்களை மாற்றுவதன் மூலம் நம் மூளையின் முதுமையையும், நினைவாற்றலையும் நம்மால் நிச்சயம் பாதுகாக்க முடியும் என்பதே இந்த சர்வதேச ஆய்வு நமக்கு உணர்த்தும் இறுதிப் பாடமாகும்.

