தமிழக அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பங்களுக்கும் வியப்பான நிகழ்வுகளுக்கும் எப்போதுமே பஞ்சம் இருக்காது. அந்த வகையில், மத்திய அரசு விழா ஒன்றில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பங்கேற்றதுதான் தமிழக அரசியலில் பரபரப்பான விவாதத்தையும் பரவலான ஊகங்களையும் கிளப்பியுள்ளது.
விழா பின்னணியும் மேயர் பிரியாவின் பங்கேற்பும்
சென்னை கொளத்தூர் தபால் நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய பாஸ்போர்ட் மையத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று முறைப்படி திறந்து வைத்தார். எளிய மக்களுக்கும் அரசுச் சேவைகள் நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், தபால் நிலையங்கள் தற்போது வங்கி, காப்பீடு, ஆதார் உள்ளிட்ட பல்வேறு குடிமக்கள் மையச் சேவைகளை ஒரே கூரையின் கீழ் வழங்கும் ஒருங்கிணைந்த பொதுச் சேவை மையங்களாக மாறியுள்ளதாக அமைச்சர் எல்.முருகன் விழாவில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் இந்த விழாவில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு ஆகியோருடன் மேயர் பிரியாவும் முன்னிலை வகித்து மேடையைப் பகிர்ந்து கொண்டார். இது தற்செயலான ஒரு நிகழ்வாகப் பார்க்கப்பட்டாலும், இதற்குப் பின்னால் இருக்கும் மேயரின் சமீபத்திய அரசியல் செயல்பாடுகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
மாநில அரசு விழா புறக்கணிப்பு
மேயர் பிரியாவின் இந்த பங்கேற்பு ஏன் இவ்வளவு பெரிய விவாதமாக மாறுகிறது என்றால், சமீபகாலமாகத் தமிழகத்தில் ஆளும் தவெக தலைமையிலான மாநில அரசின் அதிகாரப்பூர்வ அரசு விழாக்களில் அவர் தொடர்ச்சியாகப் பங்கேற்காமல் தவிர்த்து வருகிறார். குறிப்பாக, முதல்வர் விஜய் கலந்துகொண்ட சென்னை நிகழ்ச்சிகள் மற்றும் பெரம்பூரில் நடைபெற்ற முக்கிய அரசு விழா ஆகியவற்றில் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், சொந்த மாநில அரசின் நிகழ்வுகளைப் புறக்கணித்துவிட்டு, மத்திய பாஜக அமைச்சரின் விழாவிற்கு அவர் முக்கியத்துவம் கொடுத்து ஓடோடி வந்திருப்பது தற்செயலானது அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
அமைச்சர் நிர்மல் குமாரின் வெடிகுண்டு குற்றச்சாட்டு
இத்தகைய சூழலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் ஒரு மிகப்பெரிய அரசியல் குண்டை தூக்கிப் போட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து திரைமறைவில் ஒரு புதிய ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, டெல்லியில் பாஜகவுடன் கூட்டணியில் இணையவும், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம் பெறவும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அமைச்சர் நிர்மல் குமாரின் இந்த கூற்றை நிரூபிக்கும் முதற்கட்ட நகர்வுதான் மேயர் பிரியாவின் இந்த டெல்லி விசுவாசமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ப.சிதம்பரத்தின் எச்சரிக்கையும் டெல்லி வியூகமும்
திமுகவின் இந்த திடீர் டெல்லி பாசத்திற்குப் பின்னால் உள்ள மற்றொரு முக்கியக் காரணியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் அம்பலப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், மத்திய பாஜக அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதிகள் மறுவரையறை (Delimitation) தொடர்பான புதிய சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு திரட்டும் நோக்கில், திமுக மற்றும் சரத் பவாரின் என்சிபி ஆகிய கட்சிகளைத் தன்வசப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து வலைவீசி வருவதாக அவர் நேற்று முன்தினம் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், “தொகுதிகள் மறுவரையறையை மட்டுமே முக்கிய நோக்கமாகக் கொண்ட இந்த புதிய மசோதாவின் திருத்தப்பட்ட வடிவத்திற்கு ஏதேனும் ஒரு கட்சி ஆதரவு அளித்தால், அது கடந்த ஏப்ரல் மாதத்தில் அவர்கள் எடுத்த சொந்தக் கொள்கை முடிவுக்குச் செய்யும் துரோகமாகவே அமையும்” என்றும் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார். இதன் மூலம், டெல்லியில் மசோதாக்களை நிறைவேற்றத் தேவையான பலத்திற்காகத் திமுகவை வளைக்க பாஜக முயல்வதும், அதற்குப் பிரதிபலனாக மத்திய அமைச்சரவையில் திமுக-வுக்கு இடம் தரப்படலாம் என ஊகங்கள் கிளம்பி உள்ளன.
கூட்டணி நிஜமாகிறதா?
இவை எல்லாவற்றையும் விட அண்மையில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “ 6 மாத காலத்திற்குள் இந்த ஆட்சி போய்விடும். தமிழ்நாட்டின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் வருவார். திருச்சி சிவா போன்றவர்கள் எல்லாம் மத்தியில் அமைச்சராக அமர்வார்கள்” எனக் கூறி இருந்தார்.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, தமிழகத்தில் கொள்கை ரீதியாக பாஜகவை மிகக் கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டி வரும் திமுக, திரைமறைவில் தேசிய அளவில் தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும், தொகுதிகள் மறுவரையறை ஆதரவு கொடுக்கத் தயாராகி வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மாநில அரசைத் தூக்கி எறிந்துவிட்டு மத்திய அரசின் பாஸ்போர்ட் மையத் தொடக்க விழாவில் மேயர் பிரியா காட்டிய ஆர்வம், அமைச்சர் நிர்மல் குமார் சொன்னது போல “பாஜக – திமுக” கூட்டணி நிஜமாகப் போகிறதா என்ற விவாதத்தை தீவிரப்படுத்தி உள்ளது.
மொத்தத்தில், இது வெறும் அரசு மரபு சார்ந்த பங்கேற்பா அல்லது தமிழக அரசியலில் அரங்கேறப் போகும் ஒரு மெகா கூட்டணி மாற்றத்திற்கான அச்சாரமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
– பா. முகிலன்
