‘கடவுளின் தேசம்’ என்று உலகமே கொண்டாடும் கேரளா, இன்று கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கிறது. பசுமை போர்த்திய வயநாட்டின் மலைகள், ஒவ்வொரு ஜூலை மாதத்திலும் ஏதோ ஒரு சோகத்தை சுமந்து கொண்டு வந்து விடுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2024 ஜூலை 30 அதே நாளில், அதே நிலப்பரப்பில் நிகழ்ந்த அந்தப் பேரழிவு இன்னும் இதயங்களில் ஆறாத ரணமாக இருக்கும் நிலையில், மீண்டும் ஒரு ஜூலை, மீண்டும் ஒரு நிலச்சரிவு! இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான இந்த நீண்ட போராட்டத்தின் வலியும், வேதனையும் இன்றும் தொடர்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வயநாட்டின் மண்ணில் நிகழ்ந்த அந்தச் சம்பவம், ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கியது. உறங்கிக் கொண்டிருந்த கிராமங்களை உருக்குலைத்த நிலச்சரிவு, 390க்கும் அதிகமானோரின் உயிரை பறித்தது. அந்த வடுக்கள் மறைவதற்குள், மீண்டும் அதே பருவமழை காலம், மீண்டும் அதே மலைச் சரிவுகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, இயற்கையின் சீற்றத்திற்கு எல்லை இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. கனமழை, மண்ணாங்கட்டி சரிவுகள், வீடுகளை விழுங்கிய மண் என வயநாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இன்று அச்சமும், அழுகையுமே எஞ்சியுள்ளன.
மலைகளின் அரவணைப்பில் வாழ்ந்த மக்கள், மண்ணின் மடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது இயற்கை காட்டிய இந்தத் தீராத கோபம், சொல்லொணாத் துயரத்தைத் தந்துள்ளது. வீடுகளை இழந்தவர்கள், உறவுகளைப் பிரிந்தவர்கள், வாழ்வாதாரத்தை மண்ணோடு இழந்தவர்கள் என வயநாட்டின் கண்ணீர்க்கதை, வெறும் புள்ளிவிவரங்களுக்குள் அடங்காதது. ஒரு காலத்தில் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்ந்த வயநாடு, இன்று இயற்கை சீற்றங்களின் களமான மாறியிருப்பது, சுற்றுச்சூழல் மாற்றத்தின் எச்சரிக்கையோ என்ற அச்சத்தை ஒவ்வொருவர் மனதிலும் விதைக்கிறது.
தற்போதைய நிகழ்விலும், மீட்புப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரு ஆண்டுகளுக்கு முன்பு கற்ற பாடங்களை நினைவுகூர்ந்து, மீட்புப் படையினரும், தன்னார்வலர்களும், உள்ளூர் மக்களும் ஒருமித்த குரலோடு களம் இறங்கியுள்ளனர். சேற்றுச் சகதியிலும், சரிந்து கிடக்கும் பாறைகளிலும் சிக்கியிருக்கும் உயிர்களை மீட்க நடைபெறும் போராட்டம், மனிதநேயத்தின் உச்சம். ஆனால், இந்த மீட்புப் பணிகள் எத்தனை உயிர்களைக் காப்பாற்றினாலும், இழந்த வாழ்வின் நினைவுகளையும், மண்ணோடு மண்ணான வீடுகளையும் யாரால் திருப்பித் தர முடியும்? என்ற கேள்வியும் அப்பகுதி மக்களின் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.
வயநாட்டின் இந்த ஜூலை துயரம், இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய நேரத்தை நமக்குக் கட்டாயப்படுத்துகிறது. மலைகள் அழியும்போது மண்ணின் பிடிப்பு தளர்ந்து, அது மனிதகுலத்தின் மீது விழுந்து கொண்டேதான் இருக்கும். இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவின் இந்தத் துயரம், வெறும் செய்தி மட்டுமல்ல; இது ஒரு எச்சரிக்கை மணி. வயநாட்டின் கண்ணீர் மீண்டும் ஒருமுறை வடிந்து கொண்டிருக்கிறது, இயற்கையின் மடியில் மீண்டும் அமைதி திரும்பட்டும் என்று அனைவரும் பிரார்த்திப்போம்.
