சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டத்தில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது, அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிய வழக்கு முடித்து வைத்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு.
கேசவமணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சொர்ண மூர்த்தீஸ்வரர் திருக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது .
2014 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவின்படி யாருக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது எனவும் அனைத்து சமூக மக்களையும் இணைத்து அவர்களது பங்களிப்புடன் திருவிழா நடைபெற வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு புதிய தேரோட்டமும் திருவிழாவும் நடைபெற்றது. அப்போது அனைத்து சமூக மக்களும் தேரின் வடத்தை பிடித்து இழுப்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. இருப்பினும் முதல் மரியாதை பெறுவதற்காக சில நாட்டார்கள் அவர்கள் சார்ந்த அதிக நபர்களை கூட்டிச் சென்று தேரின் வடத்தை பிடித்ததால் பிற சமூக மக்கள் தேரின் வடத்தை பிடித்து இழுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது.
இந்த ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி கண்டதேவி ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தேரின் வடத்தை பிடித்து இழப்பதற்கு வசதியாக யாருக்கும் முதல் மரியாதை வழங்க படக்கூடாது. என அதிகாரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே கோவில் தேரோட்ட நிகழ்வில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது அனைத்து தரப்பு சமூக மக்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி மரியா கிளாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கடந்த ஆண்டு ஏற்கனவே உள்ள உத்தரவுபடி , முறைபடி மரியாதை செலுத்தப்பட்டது.
கோவில் தேரோட்டத்தில் எந்த பாகுபாடும் இல்லாமல் பங்கேற்றனர். இந்த ஆண்டும் அதே போல் தோரோட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில், யாருக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது. தேரோட்டதில் பட்டியலின மக்களை பங்கேற்காமல் தடுக்கின்றனர் என வாதிட்டார். தொடர்ந்து நீதிபதிகள், சாதிய பாகுபாடு இருந்தால், உரிய அமைப்பிடம் , அதிகாரிகளிடம் சென்று முறையிட்டு நிவாரணம் பெறலாம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பழக்க வழக்கம் உள்ளது. மத நம்பிக்கை உள்ளது.இதில் உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. மேலும், இது குறித்த வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணையில் இருப்பதால் தற்போது நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என கருத்து தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.