தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ திரைப்படங்கள் மைல்கல்லாக அமைந்திருந்தாலும், 1986-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ‘விக்ரம்’ திரைப்படத்திற்கு என்று தனித்துவமான இடம் உண்டு. உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி, தயாரித்து, நடித்த இத்திரைப்படம் வெளியாகி தற்போது 40 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது.
இவ்விழாவை முன்னிட்டு, கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் சிறப்புப் பகிர்வு ஒன்றைப் பகிர்ந்துள்ளது. விக்ரம் திரைப்படத்தின் 40-ஆவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் #40yearsofVikram மற்றும் #Vikram40 ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், “தொலைநோக்கு பார்வையால் செதுக்கப்பட்ட ஒரு பாரம்பரியம், தலைமுறைகள் கடந்தும் நினைவுகூரப்படுகிறது”
தமிழ் சினிமாவின் முதல் அதிநவீன ஸ்பை த்ரில்லர் படமாகக் கருதப்படும் ‘விக்ரம்’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். மேலும், கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார். இந்த 40 ஆண்டுக்கால கொண்டாட்டப் பதிவில் உலகநாயகன் கமல்ஹாசன், இளையராஜா, வைரமுத்து ஆகியோருடன் டர்மெரிக் மீடியா மகிழ்மன்றம் மற்றும் மக்கள் தொடர்பாளர்கள் ஐயம்பாபு, சதிஷ் உள்ளிட்ட பலரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளக் கணக்குகளும் டேக் செய்யப்பட்டுள்ளன.
1986-இல் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம், கணினி மூலம் பாடல்களைப் பதிவு செய்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. அதுமட்டுமன்றி, பல தசாப்தங்களுக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 2022-இல் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்திற்கும் இந்த பழைய விக்ரம் தான் அடித்தளமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
40 ஆண்டுகளைக் கடந்தும் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தின் இந்த மைல்கல் கொண்டாட்டத்தை உலகநாயகனின் ரசிகர்களும், சினிமா பிரியர்களும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
