ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன், கார் மீது மோதிய விபத்தில் சிறுமி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மாந்தாங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் சாரா தனியார் காலணி தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் பணி முடிந்ததும் நிறுவன வேனில் ஏற்றி வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். பனப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த வேன், ஒச்சேரி அடுத்த சித்தாஞ்சி – சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை தடுப்புச்சுவரில் மோதி, எதிர்திசையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதி பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காஞ்சிபுரத்திலிருந்து ஆம்பூர் நோக்கி சென்ற காரில் பயணம் செய்த 3 வயது சிறுமி 80 வயது முதியவர், கார் ஓட்டுநர் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு பெண் பலத்த காயங்களுடன் கவலைக்கிடமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஷூ கம்பெனி ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்த வந்த காவேரிப்பாக்கம் போலீசார் காயமடைந்தவர்களை பார்வையிட்டதோடு, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற வாகனம் எவ்வாறு கட்டுப்பாட்டை இழந்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தொடர்ந்து ராணிப்பேட்டை மற்றும் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர்கள் தாஹிரா, கபீல் ஆகியோர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஊழியர்களிடம் நலம் விசாரித்து தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
