தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெறும் வேட்பாளர்களைப் பாதுகாப்பாகத் தங்க வைக்க அக்கட்சியின் தலைமை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மற்ற கட்சிகள் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுப்பதைத் தடுக்கவும், ‘குதிரை பேர’ அபாயத்தைத் தவிர்க்கவும் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக சென்னை – புதுச்சேரி இடையிலான கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பல சொகுசு விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்வது குறித்து கட்சி நிர்வாகிகள் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றவுடன், அந்தந்த வேட்பாளர்கள் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்திற்கு வர வேண்டும் என்று விஜய் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சொகுசு விடுதி ஏற்பாடுகளும் செய்யப்படுவதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழலைக் கையாள்வதில் தவெக தலைமை மிகவும் கவனமாகவும், திட்டமிட்ட ரீதியிலும் செயல்பட்டு வருவதையே இந்த நகர்வுகள் காட்டுகின்றன.
