தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் காலியாக உள்ள இரண்டு உறுப்பினர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் காலியாக உள்ள இரண்டு உறுப்பினர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தலைவர் மட்டுமே புகார்களை விசாரித்து வருவதால் 37 ஆயிரம் புகார்கள் வரை தேக்கமடைந்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் காலியிடங்களை நிரப்பக் கோரி தமிழக ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.
