கோவையில் சிறுமி கொலையான நிகழ்வின் சோகம் அடங்கும் முன்பே மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள பதிவில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த வண்டிபாளையம் பகுதியில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
குழந்தை என்றும் பாராமல் இத்தகைய செயல்களில் மனித மிருகங்கள் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது. கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட பதட்டம் விலகும் முன்பே நிகழ்ந்துள்ள இந்தக் கொடுமை குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் அரசு கூடுதல் கவனமும், அக்கறையும் காட்ட வேண்டும் என வலியுறுத்துவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், கன்னியப்பன் என்கிற 62 வயது முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
