தமிழ்நாடு மின்சாரத்துறையில் இனிமேல் எந்தவொரு புதிய டெண்டர் (ஒப்பந்தப் புள்ளி) அறிவிப்பை வெளியிடுவதற்கும் முன்பாக, மூன்று கட்ட ஆய்வுகளைக் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என்று மின்வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மின்வாரியத்தின் கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
3 புதிய குழுக்கள்
டெண்டர்களை முறையாக ஆய்வு செய்வதற்காக மின்வாரியம் சார்பில் தற்போது 3 முக்கியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சந்தைப் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு சரிபார்ப்புக் குழு
உள்நாட்டுச் சந்தையில் மூலப்பொருட்களின் தற்போதைய விலை நிலவரங்களை இக்குழு ஆய்வு செய்யும். மேலும், பல்வேறு வகையிலான விலைத் தரவுகளை மதிப்பீடு செய்வதுடன், தனியார் நிறுவனங்கள் அதே பொருட்களை என்ன விலைக்குக் கொள்முதல் செய்கின்றன என்பதையும் ஒப்பிட்டு ஆராயும்.
உற்பத்தியாளர் மதிப்பீட்டுக் குழு
மின்வாரியத்திற்குத் தேவைப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலைகளை, வெளிநாட்டுச் சந்தை நிலவரங்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யும் பணியை இக்குழு மேற்கொள்ளும்.
குறுக்கு சரிபார்ப்பு குழு
மேற்கண்ட சந்தைப் பகுப்பாய்வுக் குழு மற்றும் உற்பத்தியாளர் குழு அளித்த அறிக்கைகளைப் பெற்றுக் கொண்டு, அவற்றை அண்டை மாநிலங்களின் மின்வாரியங்கள் அதே பொருட்களை என்ன விலைக்குக் கொள்முதல் செய்கின்றன என்ற விபரங்களோடு குறுக்குச் சரிபார்ப்பு (Cross-Verify) செய்யும்.
7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல்
சந்தைப் பகுப்பாய்வுக் குழு மற்றும் உற்பத்தியாளர் மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கைகள் கிடைத்த 7 நாட்களுக்குள், அவற்றை முழுமையாக ஆய்வு செய்து குறுக்கு சரிபார்ப்புக் குழு தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
நிலுவையில் உள்ள டெண்டர்களுக்கும் பொருந்துமா?
இந்த புதிய விதிமுறை இனிமேல் வரவிருக்கும் புதிய டெண்டர்களுக்கு மட்டுமன்றி, ஏற்கனவே வெளியிடப்பட்டு இன்னும் இறுதி செய்யப்படாமல் நிலுவையில் இருக்கும் அனைத்து டெண்டர்களுக்கும் பொருந்தும். அவையும் இக்குழுக்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இறுதி செய்யப்படும் என்று மின்வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
